டெல்லி யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து.. 29 பேர் பலி.. கண் அயர்ந்த ஓட்டுநரால் விபரீதம்
டெல்லி: டெல்லி அருகே யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று இன்று அதிகாலை 50 அடி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா மற்றும ஆக்ரா வரை 165 கிலோமீட்டருக்கு 6வழி நெடுஞ்சாலை உள்ளது. அதிவேக நெடுஞ்சாலையான இதில் இன்று அதிகாலை லக்னோவில் இருந்து டெல்லிக்கு 46 பயணிகளுடன் ஸ்லீப்பர் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாரத விதமாக பேருந்து நெடுஞ்சாலை தடுப்பை உடைத்துக்கொண்டு 50 அடி கால்வாயில் கவிழ்ந்து நொறுங்கியது. இந்த சம்பவம் குறித்து அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பேருந்துகளின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கோர விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து அறிந்த, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பயணிகள் உயிரிழந்ததற்கு தனது வருத்தத்தினையும், இரங்கல்களையும் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தோருக்கு அனைத்து மருத்துவ வசதிகளையும் செய்யும்படி உத்தரப்பிரதேச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்து உத்தர பிரதேச மாநில போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
பேருந்து ஒட்டுநர் அதிகாலை நேரத்தில் திடீரென கண் அயர்ந்ததே இந்த கோரவிபத்துக்கு காரணம் என காயமடைந்த பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.