சூடானில் உள்நாட்டு போர்.. 3 இந்தியர்கள் உள்பட 66 வெளிநாட்டினரை மீட்டது சவுதி அரேபியா
டெல்லி: உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் இருந்து 3 இந்தியர்களை மீட்டுள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக அந்நாட்டின் ராணுவத்தினருக்கும், அவர்களின் எதிர்த்தரப்பினருக்கும் இடையே கடுமையான உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.
இந்தப் போர் நடைபெறும் நாட்டில் 200-க்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட 3000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பல அரசியல் கட்சிகள் கவலை தெரிவித்தன. சூடானில் தங்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

குழந்தைகளுடன் தங்கியுள்ள அவர்கள், குழந்தைகளுக்கான உணவு கூட கிடைக்காததால் ஒவ்வொரு நிமிடமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்தன. சூடானின் 24 மணி நேரம் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கும் போதிலும் கூட தமிழர்கள் அதிகம் வாழும் உம்துர்மன் நகரம் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. சாலைகளில் செல்லும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது. அதனால் தமிழர்கள் அச்சத்தில் உறைந்தனர்.
இந்த நிலையில் சூடானில் இருந்து வெளிநாட்டு குடிமக்களை மீட்கும் பணிகளை அந்தந்த நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அங்கு சிக்கியிருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க மத்திய அரசும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இந்த நிலையில் சவுதி அரேபியா தனது குடிமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள விமானங்கள் மூலம் நட்பு நாடுகளை சேர்ந்த குடிமக்களையும் மீட்டு வருகிறது.

அந்த வகையில் 66 வெளிநாட்டினரை நேற்று மீட்டுள்ளதாக அந்த நாடு தெரிவித்துள்ளது. அதில் 3 பேர் இந்தியர்கள் ஆவர். சூடான் தலைநகர் கார்தூமில் சிக்கியிருந்த அவர்கள் மூவரும் சவுதி அரேபிய விமானத்தின் ஊழியர்கள் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications