தமிழகத்திற்கான மானியம் 300 மடங்கு அதிகரிப்பு.. மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன் அளித்த விளக்கம்
டெல்லி: நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்படுவதாக தென்மாநிலங்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தமிழகத்திற்கான மானியம் கடந்த 9 ஆண்டுகளில் 300 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வெள்ள நிவாரணம், வரிப்பங்கீடு போன்றவைகளில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை மத்திய அரசு வஞ்சிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இது தொடர்பாக மத்திய அரசை தமிழக அமைச்சர்கள் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு வரி பங்கீடில் பாரபட்சம் காட்டுவதாக விமர்சித்து வருகின்றனர்.

நிதி ஒதுக்கீட்டில் கர்நாடகத்துக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறி, மத்திய அரசை கண்டித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல், நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக கூறி கேரள அரசு சார்பிலும் நேற்று டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமை தாங்கினார். இதில் ஆளும் இடது முன்னணியை சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கலந்துகொண்டனர்.
மேலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் இடது முன்னணி தலைவர்கள் கலந்துகொண்டனர். தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் இதில் கலந்து கொண்டார். மத்திய அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதற்கிடையே, தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது எக்ஸ் தளத்தில் மத்திய அரசை கடுமையாக சாடியிருந்தார். உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், "கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு ரூ.6 லட்சம் கோடி வரி கொடுத்துள்ள போதும், ரூ.1.58 லட்சம் கோடியை மட்டுமே வரிப்பகிர்வாக ஒன்றிய அரசு திருப்பிக் கொடுத்துள்ளது. ஆனால், ரூ.3.41 லட்சம் கோடி வரி கட்டிய உத்தர பிரதேசத்துக்கு கிட்டத்தட்ட ரூ.7 லட்சம் கோடி வரிப்பகிர்வை வாரி வழங்கியுள்ளார்கள். தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியைக் கேட்டால் பதிலுக்கு மரியாதையை கேட்கிறார்கள்" என்று பதிவிட்டிருந்தார்.
இதனிடையே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்திற்கான நிதி பகிர்வு குறித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- "கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கான மானியம் 300 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2023 டிசம்பர் வரை தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.2,77,444 கோடி வழங்கியுள்ளது. என்று தெரிவித்துள்ளார்" என்றார்.












Click it and Unblock the Notifications