வெளிநாடு போறீங்களா.. இந்த 5 நாடுகளுக்கு பயணிக்க தடுப்பூசி டோஸ் போட அவசியமில்லை.. முழு விவரம்!
டெல்லி: இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் இரண்டாவது அலை போட்டு புரட்டி எடுத்தது. அப்போது இந்தியாவை கண்டு உலக நாடுகள் பதறியடித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தன.
அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டுக்கும் விமான போக்குவரத்துக்கு தடை விதித்தன. இதேபோல் இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என்று நாடு மக்களுக்கும் தடை விதித்தன.
தற்போது இந்தியாவில் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து பெரும்பாலான நாடுகள் இந்தியர்கள் தங்கள் நாட்டுக்கு வர பச்சைக்கொடி காட்டி விட்டன.
தடுப்பூசி போடும் இந்தியர்கள்
ஆனால் இதில் சில நாடுகள் குறைந்தது ஒரு தடுப்பூசி டோஸ் பெற்றுக் கொண்டவர்கள்தான் வர முடியும் என்று கூறி விட்டது. இதனால் வெளிநாடுகளுக்கு உயர்படிப்புக்காக, வேலைக்காக செல்லும் இந்தியர்கள் அவசரம், அவசரமாக தடுப்பூசி போட்டு வருகின்றன.
5 நாடுகள்
ஆனால் இந்தியர்கள் உள்பட தங்கள் நாட்டினர் தங்களது நாட்டுக்கு வருவதற்கு தடுப்பூசி டோஸ் செலுத்தி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மாலத்தீவு, ரஷ்யா, துருக்கி, செர்பியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இந்த நாடுகளுக்கு செல்ல வேண்டுமானால் என்னென்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றி கீழே காண்போம்.
மாலத்தீவு
சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து இழுக்க கூடிய, அழகிய தீவுக் கூட்டங்களை கொண்ட மாலத்தீவு ஜூலை 15 முதல் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் பயணிகளுக்காக தனது எல்லைகளைத் திறந்துள்ளது. மாலத்தீவு செல்ல வேண்டுமானால் கொரோனா நெகட்டிவ் என்று குறிப்பிட்டுள்ள ஆர்டி-பி.சி.ஆர் சோதனை அறிக்கையை கையில் வைத்திருப்பது அவசியமாகும்.
ரஷ்யா
ரஷ்யா இப்போது இந்தியர்கள் தங்களது நாட்டுக்கு வரலாம் என்று அறிவித்துள்ளது. இருப்பினும் பயணிகள் ரஷ்யாவுக்குள் நுழைய பல்வேறு கொரோனா தொடர்பான வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
* ரஷ்யாவிற்கு நுழைவதற்கு அரசால் அனுமதிக்கப்பட்ட சுற்றுலா நிறுவனத்திடமிருந்து உங்களுக்கு அனுமதி இருக்க வேண்டும்
* ஒற்றை நுழைவு அல்லது இரட்டை நுழைவுக்கு 30 நாட்கள் வரை செல்லுபடியாகும் சுற்றுலா விசாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்
* 72 மணி நேரத்துக்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் என்று குறிப்பிட்டுள்ள ஆர்டி-பி.சி.ஆர் சோதனை அறிக்கையை காண்பிக்க வேண்டும்
* இருப்பினும் ரஷ்யாவுக்குள் நுழைந்தவுடன் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயமாகும். பாசிட்டிவ் கொண்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள்
துருக்கி
* இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் கட்டாயம்14 நாட்கள் தனிமைப்படுத்த படுவார்கள்
* தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்குப் பிறகு அவர்கள் கொரோனா சோதனை செய்ய வேண்டும்
* கொரோனா நெகட்டிவ் வந்தால்தான் பயணிகள் தனிமைப்படுத்துதலில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்
* துருக்கியைப் பொறுத்தவரை விமான டிக்கெட்டுகளின் விலை இப்போது வழக்கத்தை விட விலை அதிகமாக இருக்கிறது
செர்பியா
* இந்தியாவில் இருந்து செர்பியா செல்லும் பயணிகள் ஆர்டி-பி.சி.ஆர் கொரோனா நெகட்டிவ் அறிக்கையை எடுத்துச் செல்ல வேண்டும்
* இந்தியாவில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு ஆர்டி-பி.சி.ஆர் சோதனை செய்திருக்க வேண்டும்
* இந்தியாவில் இருந்து செர்பியாவுக்கு தற்போது குறிப்பிட்ட விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன
எகிப்து
* இந்தியா உள்பட வெளிநாடுகளில் இருந்து செல்லும் பயணிகளுக்கு கட்டாய பயணிகள் 15 நிமிட டி.என்.ஏ பரிசோதனை நடைபெறும்
* கொரோனா நெகட்டிவ் என்று குறிப்பிட்டுள்ள ஆர்டி-பி.சி.ஆர் சோதனை அறிக்கையை எடுத்து செல்ல வேண்டும்
* எகிப்தில் நுழைந்ததும் கொரோனா பரிசோதனை நடைபெறும். அதில் நெகட்டிவ் வந்தால்தான் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்