ஒரே நாளில் 550 இண்டிகோ விமானங்கள் ரத்து.. பயணிகள் அவதி! என்ன நடக்கிறது?
டெல்லி: நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் சுமார் 550 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் பயணிகள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சென்னையில் மட்டும் 28 புறப்பாடு, 6 வருகை என மொத்தம் 34 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
கடந்த மூன்று தினங்களாக இண்டிகோ விமான சேவைகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான செயல்பாட்டுத் தடங்கல்கள் காரணமாக, இன்று 550க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மும்பை விமான நிலையத்தில் 118, பெங்களூருவில் 100, ஹைதராபாத்தில் 75, கொல்கத்தாவில் 35, மற்றும் கோவாவில் 11 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

இது தவிர, மேலும் பல விமான நிலையங்களிலும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை ஆய்வு செய்து வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்திருக்கிறது.
காரணம் என்ன?
விமானத்துறையில் ஏற்படும் விபத்துகளை குறைக்க, விமான ஊழியர்களின் பணி நேரம் ஓய்வு நேரம் மற்றும் பிரேக் நேரம் ஆகியவற்றை வரையறை செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு விமானி இவ்வளவு நேரம் மட்டுமே பணியில் இருக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. இதை 'விமான பணிக் கால வரம்புகள் விதி' என்று சொல்வார்கள்.
இந்த விதியை சமீபத்தில் சிவில் விமான போக்குவரத்து துறை மாற்றி அமைத்திருக்கிறது. நம்மூர் பேருந்துகளை கட்டுப்படுத்தும் போக்குவரத்து துறை போல, பயணிகளின் விமான சேவைகளை இந்த சிவில் விமான போக்குவரத்து துறை கட்டுப்படுத்தி வருகிறது. சமீப காலமாக விமான விபத்துக்கள் அதிகரித்துள்ளன. எனவே, இதனை தடுக்க சில மாற்றங்களை இந்த துறை விமான பணிக் கால வரம்புகள் விதியில் கொண்டு வந்திருக்கிறது.
அதாவது, பழைய விதிமுறையை படி ஒரு விமானிக்கு 36 மணி நேரம் வாரத்திற்கு ஒரு முறை விடுமுறை அளிக்கப்படும். ஆனால், புதிய விதிமுறைகளின்படி 48 மணி நேரம் தொடர்ந்து விமானிக்கு ஓய்வு கொடுக்கப்பட வேண்டும். அதாவது 2 நாட்கள் கட்டாயம் விடுப்பு கொடுக்கப்பட வேண்டும். மட்டுமல்லாது சோர்வில் இருந்து மீண்டு வர கூடுதல் நேரமும் ஒதுக்கப்பட வேண்டும்.
அதேபோல, ஒரு விமானம் ஓடு பாதையில் இருந்து மேல் எழும்பி, மீண்டும் இன்னொரு விமான நிலையத்தின் ஓடுபாதையை தொடும் வரை மொத்தமாக 8 மணி நேரம் மட்டுமே விமானி பணியில் இருக்க வேண்டும் என புதிய விதிமுறை கூறுகிறது. பழைய விதிமுறையில் 13 மணி நேரம் வரை பணியில் இருக்கலாம் என்று சொல்லப்பட்டிருந்தது.
ஒரு விமானி இரவு நேரங்களில் அதிகபட்சமாக 6 முறை வரை விமானங்களை லேண்ட் பழைய விதிமுறை அனுமதித்திருந்தது. ஆனால், புதிய விதிமுறையில் 2 முறை மட்டுமே ஒரு விமானி விமானங்களை இரவு நேரங்களில் தரை இறக்க முடியும். மட்டுமல்லாது தொடர்ச்சியான இரவு பணி பழைய விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிய விதிமுறைகளின்படி, ஒரு விமானிக்கு 2 நைட் சிப்டுகளுக்கு மேல் போடக்கூடாது என்று கறாராக கூறுகிறது. இந்த விமான கட்டுப்பாடுகள் அனைத்தும் குறுகிய தூரம் மற்றும் நடுத்தர தூர விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
எனவே இந்த விதிப்படி விமான நிறுவனங்கள் தங்கள் விமானிகள் மற்றும் பணி குழுவினரின் பணி அட்டவணையை திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். பிரச்சனை என்னவெனில், பணி நேரம் குறைந்ததால் கூடுதல் ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். இதை இண்டிகோ நிறுவனம் நியமிக்கவில்லை. குறைந்த ஆட்களை கொண்டு அதிக வேலையை வாங்கிக் கொள்ளலாம் என்று எல்லா முதலாளிகளை போல, இண்டிகோவும் மனக்கணக்கு போட்டது. ஆனால், போதுமான ஆட்கள் இல்லாததால் தற்போது விமானங்களை இயக்க முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications