நாளை தாக்கலாகும் மத்திய பட்ஜெட்.. மாத சம்பள ஊழியர்களின் 6 "முக்கிய" எதிர்பார்ப்புகள் என்ன தெரியுமா?
வீட்டுக் கடனுக்கு தற்போது ரூ.2 லட்சம் வரை வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த விலக்கை அதிகரிக்குமாறு மாத சம்பளதாரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
டெல்லி: மத்திய பட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிலையில், மாத சம்பளதாரர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்கள்.
கொரோனா தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, நாட்டில் நிலவும் பணவீக்கம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு இந்த சலுகைகளை அவர்கள் கோரியுள்ளனர்.
மாத சம்பளதாரர்களின் பல கோரிக்கைகள் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் நிறைவேற்றப்படாத நிலையில், நடப்பாண்டு பட்ஜெட்டிலாவது தங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்குமா என்ற எதிர்பார்ப்பு அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வருமான வரி பிடித்தத்தில் விலக்கு
அந்த வகையில், மாத சம்பளதாரர்களின் முதல் கோரிக்கையாக இருப்பது, வருமான வரி பிடித்தம் செய்யப்படும் தொகையில் சிறிது விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான். கொரோனா தொற்று மற்றும் பணவீக்கம் ஆகியவற்றால் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், தற்போது வருமான வரி பிடித்தம் செய்யப்படும் தொகையின் அளவை கணிசமாக குறைக்கும்படி மாத சம்பளதாரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வருமான வரி உச்சவரம்பை
வருமான வரி பிடித்தம் செய்யப்படும் உச்சரவரம்பை மாற்றியமைக்க வேண்டும் என்பதும் மாத சம்பளதாரர்களின் முக்கிய கோரிக்கைகளின் ஒன்றாக உள்ளது. அதாவது, ஆண்டு வருமானத்திற்கேற்ப தற்போது குறிப்பிட்ட சதவீதம் வருமான வரி பிடிக்கப்படுகிறது. இந்த அளவை குறைக்குமாறும் மாத சம்பளதாரர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். இந்த கோரிக்கை பல ஆண்டுகளாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது.

முதலீடு விலக்கை உயர்த்த வேண்டும்
அதேபோல, மாத சம்பளம் வாங்குவோர் சில பாண்டுகள், பங்குகளில் முதலீடு செய்கையில் வருமான வரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதனை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல, மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரியில் இருந்து வயது உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு ரூ.50,000 வரை விலக்கு (standard deduction) அளிக்கப்படுகிறது. இதனை ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

வீட்டில் இருந்து பணியாற்றுபவர்களுக்கு..
கொரோனா காலத்திற்கு பிறகு, பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதித்துவிட்டது. இவ்வாறு வீட்டில் இருந்து பணியாற்றுவோர் அலுவலக தேவைக்காக வாங்கும் ஒய்ஃபை ரவுட்டர், கூடுதல் இன்டர்னெட் பிளான்கள் போன்றவற்றுக்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வீட்டுக்கடன்
அதேபோல, வீட்டுக் கடனுக்கு தற்போது ரூ.2 லட்சம் வரை வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த விலக்கை அதிகரிக்குமாறு மாத சம்பளதாரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். வீட்டுக்கடனுக்கான வட்டி உயர்வு, நிலங்களின் விலை உயர்வு ஆகியவற்றை கருத்தில்கொண்டு இந்த வரிவிலக்கு சலுகையை வழங்க வேண்டும் என்பதும் மாத சம்பளதாரர்களின் முக்கிய கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications