நீட், ஜேஇஇ-க்கு எதிரான மனு தள்ளுபடி- உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்ய கோரி 6 மாநிலங்கள் மனு
டெல்லி: நீட், ஜேஇஇக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி 6 மாநிலங்களின் அமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
கொரோனா லாக்டவுன் காலம் என்பதால் நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் 11 மாணவர்கள் மனுத் தாக்கல் செய்திருந்தனர். வரும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 13 வரை நீட், ஜேஇஇ தேர்வுகள் நடைபெற உள்ளன.
கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளதால் இந்த தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு எதிரான மனுக்களை ஆகஸ்ட் 17-ந் தேதி தள்ளுபடி செய்தது.
இதனால் மத்திய அரசு திட்டமிட்டபடி நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்த உள்ளது. இதற்கான அட்மிட் கார்டுகளை இதுவரை சுமார் 14 லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். ஆனால் நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பாஜக அல்லாத 7 மாநிலங்களின் முதல்வர்கள் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர்.
Recommended Video
இந்நிலையில் மேற்கு வங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் அமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அதில், நீட் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.