பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தில் கையெழுத்தான 7 ஒப்பந்தங்கள், 5 முக்கிய திட்டங்கள் என்ன?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தில், திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துவதில் ஒத்துழைப்புக்காக இந்தியா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:

1. மின்சாரத்தை அனுப்புவதற்கான எச்விடிசி இடைத்தொடர்பு குறித்து இந்திய அரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை; இதில் இலங்கை தரப்பில் எரிசக்தி அமைச்சக செயலாளர் பேராசிரியர் கே.ரி.எம்.உதயங்க ஹேமபாலவும் இந்திய தரப்பில் வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் பிரதிநிதிகளாகப் பங்கேற்றனர்.
2. டிஜிட்டல் தீர்வுகளை பகிர்ந்து கொள்வதில் ஒத்துழைப்பு குறித்து இருநாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை;இதில் இலங்கை டிஜிட்டல் பொருளாதார செயலாளர் வருணா ஸ்ரீ தனபாலவும் இந்திய தரப்பில் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் பிரதிநிதிகளாகப் பங்கேற்றனர்.
3. திருகோணமலையை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதில் ஒத்துழைப்புக்காக இந்தியா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்; இதில் இலங்கை தரப்பில் எரிசக்தி அமைச்சக செயலாளர் பேராசிரியர் கே.ரி.எம்.உதயங்க ஹேமபாலவும் இந்திய தரப்பில் வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் பிரதிநிதிகளாகப் பங்கேற்றனர்.
4. இந்திய - இலங்கை இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை; இதில் இலங்கை பாதுகாப்பு அமைச்சகச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தவும் இந்திய தரப்பில் வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் பிரதிநிதிகளாகப் பங்கேற்றனர்.
5. கிழக்கு மாகாணத்திற்கான பல்துறை நன்கொடை உதவிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை; இதில் இலங்கை நிதித் திட்டமிடல் அமைச்சக செயலாளர் திரு.ழ கே.எம்.எம்.சிறிவர்தனவும் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜாவும் பிரதிநிதிகளாகப் பங்கேற்றனர்.
6. இந்திய அரசி சுகாதார அமைச்சகத்துக்கும் இலங்கையின் சுகாதார அமைச்சகத்துக்கும் இடையில் மருத்துவத் துறையில் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்; இதில் இலங்கை சுகாதார அமைச்சக செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்கவும் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜாவும் பிரதிநிதிகளாகப் பங்கேற்றனர்
7. இந்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் இந்திய மருந்தியல் ஆணையமும் இலங்கை அரசின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையமும் மருந்தியல் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதில் இலங்கை சுகாதார அமைச்சக செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்கவும் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜாவும் பிரதிநிதிகளாகப் பங்கேற்றனர்
நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:
1. மாஹோ - ஓமந்தை மேம்படுத்தப்பட்ட ரயில் பாதையை திறந்து வைத்தல்.
2. மாஹோ - அநுராதபுரம் பாதையின் நிர்மாணப் பணிகளை தொடங்கி வைத்தல்.
3. சம்பூர் சூரிய மின்சக்தி திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா
4. தம்புள்ளையில் அனைத்து பருவநிலைக்கும் ஏற்ற வேளாண் கிடங்கைத் திறந்து வைத்தல்
5. இலங்கை முழுவதிலுமுள்ள 5000 மத நிறுவனங்களுக்கு சூரிய மேற்கூரை அமைப்புகளை வழங்குதல்
முக்கிய அறிவிப்புகள்
இந்தப் பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் ஆண்டுக்கு இலங்கையைச் சேர்ந்த 700 பேருக்கு திறன் கட்டமைப்பை வழங்கும் திட்டத்தை அறிவித்தார். திருகோணமலை திருக்கோணேஸ்வரம் விகாரை, நுவரெலியாவில் சீதா எலியா விகாரை, அனுராதபுரத்தில் புனித நகர வளாகத் திட்டம் ஆகியவற்றின் மேம்பாட்டுக்கு இந்தியா நன்கொடை உதவி அளிக்கும் என அறிவித்தார்.












Click it and Unblock the Notifications