சுதந்திர தினம் .. டெல்லி செங்கோட்டையில் 10வது முறையாக கொடியேற்றினார் பிரதமர் மோடி.. பலத்த பாதுகாப்பு
டெல்லி: நாடு முழுவதும் 77 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் 77 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். கொடியேற்றுவதற்காக செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடியை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்று அழைத்து சென்றனர். பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை உள்ளிட்ட சம்பிரதாய நடைமுறைகளுக்கு பிறகு பிரதமர் கொடியேற்றி வைத்து உரையாற்றினார்.

கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கி 10வது முறையாக பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்தார். அவர் கொடி ஏற்றுவதற்கு, மேஜர் நிகிதா நாயர், மேஜர் ஜாஸ்மின் கவுர் ஆகியோர் உதவி செய்தனர். அப்போது 21 குண்டுகள் முழங்கப்பட்டது. பின்னர், உள்நாட்டு தயாரிப்பான மார்க்-3 துருவ் ரகத்தை சேர்ந்த 2 அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
தற்போது, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் சாதனைகள், 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது உரையின் முடிவில், தேசிய மாணவர் படையினர் தேசிய கீதம் பாடுவார்கள்.
இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். சிறப்பு விருந்தினர்களாக விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட 1,800 பேர் கலந்து கொள்கின்றனர். அமெரிக்க எம்.பி.க்கள் ரோ கன்னா, மைக்கேல் வாட்ஸ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினரும் பங்கேற்கின்றனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டை சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. செப்டம்பரில் ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் நடக்க உள்ளது. இதையொட்டி, செங்கோட்டையில் செய்யப்பட்டுள்ள மலர் அலங்காரங்களின் ஒரு பகுதியாக ஜி-20 சின்னமும் இடம்பெற்றுள்ளது.
சுதந்திர தின விழா நடைபெறும் டெல்லி செங்கோட்டையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 26ஆம் தேதி முதலே செங்கோட்டை வளாகம் எஸ்பிஜி பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் ஆயிரக்கணக்கான அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பட்டங்கள், பலூன்கள், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்களை கண்டறியும் அதிநவீன ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. செங்கோட்டை வளாகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி - குக்கி இன மக்கள் இடையே கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. அந்த மாநிலத்தை சேர்ந்த போராட்டக் குழுவினர் சுதந்திர தின விழாவின்போது டெல்லியில் குவிந்து போராட்டம் நடத்தக்கூடும் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள், விவசாயிகள் தரப்பில் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, டெல்லியில் பேருந்து, ரயில் நிலையங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications