6ஜி தொழில்நுட்பத்தை நோக்கி இந்தியா... டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி அசத்தல் அறிவிப்பு!
டெல்லி: 6 ஜி தொழில்நுட்பத்தை முன்னெடுத்துச் செல்ல ஒரு சிறப்புப் பணிக்குழு அமைக்கப்படும் என நாட்டின் 77-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி செங்கோட்டையில் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று தேசியக் கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்றினார். பிரதமர் மோடி தமது உரையில் இந்தியாவின் டிஜிட்டல் துறையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றம் பற்றி விவரித்தார். நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கும் இணையதள வசதியைக் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, டிஜிட்டல் புரட்சியின் நன்மைகள் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு கிராமத்திற்கும் இணைய வசதி சென்றடைந்துள்ளது என்றார்.

மேலும் 2014-ம் ஆண்டுக்கு முன்பு டேட்டா கட்டணங்கள் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்த நாட்களைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, உலகின் மிக மலிவு விலையிலான டேட்டா கட்டணங்களை தற்போது இந்தியா கொண்டிருக்கிறது என ஒப்பிட்டுப் பேசினார். இந்த டேட்டா செலவு குறைப்பு நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் கணிசமான சேமிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
5 ஜி அறிமுகம் செய்வதை நோக்கிய நாட்டின் விரைவான முன்னேற்றம் பற்றியும் எடுத்துரைத்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த அறிமுகம் அதிவேகமானதாக இருப்பதுடன் 700 க்கும் அதிகமான மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது என்றார்.
மேலும், 6 ஜி தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேறுவதற்கான லட்சிய இலக்கையும் பிரதமர் மோடி கோடிட்டுக் காட்டினார். இந்த முன்முயற்சியை முன்னெடுத்துச் செல்ல ஒரு சிறப்புப் பணிக்குழுவை அமைப்பது குறித்தும் பிரதமர் மோடி விவரித்தார்.












Click it and Unblock the Notifications