18- 44 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. ஒரே நாளில் 79 லட்சம் பேர் முன்பதிவு!
டெல்லி: இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட கோவின், ஆரோக்கிய சேது செயலிகள் மூலம் முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில் முதல் நாளான இன்று 79.65 லட்சம் பேர் முன்பதிவு செய்தனர்.
இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக கோவின் மற்றும் ஆரோக்கிய சேது செயலிகள் மூலம் முன்பதிவு இன்று தொடங்கியது. இன்று மாலை 4 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த முன்பதிவில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவு எண் பெறுவதில் பயனாளிகள் அவதியடைந்தனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு இரு செயலிகளும் சீராக இயங்கின. இதன் மூலம் இன்று ஒரே நாளில் 18 வயது முதல் 44 வயதுடையவர்கள் 79.65 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்றைய தினம் வரை கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் 14 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

இதுகுறித்து தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஆர் எஸ் சர்மா கூறுகையில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த 3 மணி நேரத்தில் 79,65,720 பேர் முன்பதிவு செய்தனர். ஒரு வினாடிக்கு 55 ஆயிரம் பேர் செயலியை பயன்படுத்தினர். எதிர்பார்த்தப்படி செயலி இயங்கியது என்றார்.












Click it and Unblock the Notifications