அரசு ஊழியர்களின் சம்பளம் 34% உயரும்! 8வது ஊதியக்குழு தரும் ஜாக்பாட்.. எப்போது முதல் அமலுக்கு வரும்?
டெல்லி: எட்டாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இதற்கிடையே புதிய ஊதியக் குழு நடைமுறைக்கு வந்தவுடன், ஊழியர்கள் 30-34% வரை சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் என்று ஆம்பிட் கேபிடல் நிறுவனம் கணித்துள்ளது. மேலும், இந்த ஊதிய உயர்வு 2026-27 நிதியாண்டில் இருந்து அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குப் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை ஊதியம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி இப்போது 8வது ஊதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஊதிய குழுவின் பரிந்துரைகள் குறித்து ஆம்பிட் கேபிடல் என்ற நிறுவனம் சில முக்கிய கணிப்புகளை அளித்துள்ளது.

எவ்வளவு உயரும்!
எட்டாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைக்கு வரும்போது, ஊழியர்கள் சம்பளம் 30-34% வரை உயரலாம் என்று ஆம்பிட் கேபிடல் தெரிவித்துள்ளது. 2026-27 நிதியாண்டில் இருந்து அமலுக்கு வரும் இந்த ஊதிய உயர்வால் மத்திய அரசுக்குச் சுமார் ரூ.1.8 லட்சம் கோடி செலவாகும் எனத் தெரிவித்துள்ளது. 7வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டபோது, மத்திய அரசுக்கு ரூ.1.02 லட்சம் கோடி செலவானது குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு காலம் ஆகும்!
எட்டாவது ஊதியக் குழு எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து தற்போது வரை அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் இல்லை.. விரைவில் குழு அமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் ஊதிய குழு அமைக்கப்பட்ட பின்னரும் உடனடியாக ஊதிய உயர்வு அமலுக்கு வராது. பல்வேறு தரப்பினருடன் பலதரப்பட்ட ஆலோசனைகள், ரிப்போர்ட், பிற சம்பளத் திருத்த வழிமுறைகள் எனப் பல மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக, 7வது ஊதியக் குழு அமைக்கப்பட்ட பிறகு, இறுதி பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கச் சுமார் 18 மாதங்கள் ஆனது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு பொதுவாக ஊதியக் குழுக்களை ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒருமுறை அமைக்கும். அப்போதுள்ள சூழலுக்கு ஏற்ப ஊதிய கட்டமைப்பு மாற்றி அமைக்கப்படும். இடைப்பட்ட காலத்தில் பணவீக்கத்தை ஈடுசெய்ய அகவிலைப்படி (DA) மட்டும் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அகவிலைப்படி
கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி 2% உயர்த்தப்பட்ட நிலையில், இப்போது டிஏ அடிப்படை ஊதியத்தில் 55%ஆக உள்ளது. இருப்பினும், 8வது ஊதியக் குழு நடைமுறைக்கு வந்தவுடன், இந்த அகவிலைப்படி சம்பள மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக ஜீரோவாக மாற்றி அமைக்கப்படும். அதன் பிறகு அடுத்த ஊதியக்குழு அமைக்கப்படும் வரை ஒவ்வொரு ஆண்டும் மெல்ல அதிகரிக்கப்படும். இதனால் 8வது ஊதிய குழு பரிந்துரை அமலுக்கு வரும்போது சதவிகிதம் அடிப்படையில் அது அதிகமாகத் தோன்றினாலும், கைக்கு வரும் சம்பளம் அந்தளவுக்கு உயராது.
எளிய விளக்கம்
உதாரணமாக 6வது ஊதியக் குழுவின் கீழ் ரூ.7,000 அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர் அகவிலைப்படிகளுடன் ரூ.15,750ஐ மொத்த ஊதியமாகப் பெற்றார். அப்போது 7வது ஊதியக் குழு ஃபிட்மெண்ட் பேக்டரை (fitment factor) 2.57 ஆக உயர்த்தி, குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை ரூ.18,000 ஆக உயர்த்தியது. அதேநேரம் அகவிலைப்படி ஜீரோவாக மாற்றப்பட்டது.. இதன் காரணமாக ஊதிய உயர்வு அதிகம் போலத் தெரிந்தாலும் ஹேட் ஹோம் சேலரி என்பது 14.3% மட்டுமே உயர்ந்தது. 8-வது ஊதியக் குழு நடைமுறைக்கு வரும்போதும் இதை நடைமுறை தான் பின்பற்றப்படும்.
ஏன் முக்கியம்!
இந்த ஃபிட்மெண்ட் பேக்டர் எட்டாவது ஊதியக் குழுவில் கணிசமாக இருக்கும் என்று ஆம்பிட் கேபிடல் எதிர்பார்க்கிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 30-34% வரை சம்பள உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதியங்கள் பொதுமக்கள் நுகர்வை அதிகரிக்கும் என்றும் இது இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக்குச் சுமார் 30 முதல் 50 அடிப்படை புள்ளிகளைச் சேர்க்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications