அகவிலைப்படி 25% ஐ தாண்டினாலே.. சம்பளம் அடியோடு மாறும்? வருது புதிய விதி? 8-வது ஊதியக் குழு ரூல்ஸ்
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் நீண்டகால எதிர்பார்ப்பான 8-வது ஊதியக் குழுவின் (8th Pay Commission) பணிகள் வேகம் எடுத்துள்ளன. இந்நிலையில், ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான NC-JCM (National Council Joint Consultative Machinery), மத்திய அரசுக்கு பல்வேறு முக்கியமான சில கோரிக்கைகளை அடங்கிய மனுவை சமர்ப்பித்துள்ளது.
இந்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டால், அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் படிகளில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்.

ஊழியர் சங்கம் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள் என்னென்ன என்பதை எளிய முறையில் காணலாம்.
1. 25% அகவிலைப்படி எட்டும்போதே அடிப்படை ஊதியத்துடன் இணைப்பு
தற்போதுள்ள நடைமுறைப்படி, அகவிலைப்படி (DA) ஒரு குறிப்பிட்ட அளவை எட்டும்போது அது அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுவது வழக்கம். தற்போது அகவிலைப்படி 60% ஆக உள்ள நிலையில், ஊழியர் சங்கம் ஒரு புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளது.
புதிய திட்டம்: அகவிலைப்படி அல்லது ஓய்வூதியதாரர்களுக்கான DR 25 சதவீதத்தைக் கடந்தாலே, அதை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்.
காரணம்: சந்தை விலையேற்றம் அரசு புள்ளிவிவரங்களை விட அதிகமாக இருப்பதை சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 12 மாத சராசரி முறையை மாற்றி, 6 மாத சராசரி அடிப்படையில் விலைப் பட்டியலைக் கணக்கிட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
தாக்கம்: அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைந்தால், அதன் தொடர்ச்சியாக வீட்டு வாடகைப்படி (HRA), பணிக்கொடை (Gratuity) மற்றும் ஓய்வூதியப் பலன்கள் பெருமளவு உயரும்.
2. வீட்டு வாடகைப்படி (HRA) 40% ஆக உயர்வு
நகரங்களின் வளர்ச்சி மற்றும் வாடகை உயர்வைக் கருத்தில் கொண்டு, HRA விகிதங்களை மாற்றியமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:
X வகை நகரங்கள் (50 லட்சத்திற்கும் மேலான மக்கள் தொகை): அடிப்படை ஊதியத்தில் 40%.
Y வகை நகரங்கள்: அடிப்படை ஊதியத்தில் 35%.
Z வகை நகரங்கள்: அடிப்படை ஊதியத்தில் 30%.
மேலும், ஓய்வூதியதாரர்களுக்கும் HRA வழங்கப்பட வேண்டும் என்ற புதிய கோரிக்கையும் இதில் இடம்பெற்றுள்ளது.
3. இதர படிகளில் 3 மடங்கு உயர்வு
வாழ்க்கைச் செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளதால், போக்குவரத்துப் படி (Transport Allowance), தினசரிப் படி (Daily Allowance), சீருடைப் படி (Uniform Allowance) மற்றும் செவிலியர் படி ஆகியவற்றை 3 மடங்கு (3x) உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அகவிலைப்படியுடன் இணைக்கப்பட வேண்டும், அப்போதுதான் விலைவாசிக்கு ஏற்ப தானாகவே உயரும்.
4. இடர் மற்றும் கடின உழைப்புப் படி (Risk & Hardship Allowance)
ரயில்வே, பாதுகாப்புத் துறை, சுகாதாரம் மற்றும் தீயணைப்புத் துறையில் அபாயகரமான பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ. 10,000 இடர் படியாக வழங்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
5. கல்வி மற்றும் இதர சலுகைகள்
குழந்தைகள் கல்வி உதவித்தொகை (CEA): ஒரு குழந்தைக்கு மாதம் ரூ. 10,000 ஆக உயர்த்தப்பட வேண்டும். விடுதி மானியம் மாதம் ரூ. 35,000 ஆக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பட்டமேற்படிப்பு மற்றும் தொழில்முறை படிப்புகள் வரை இந்த உதவித்தொகையை நீட்டிக்க வேண்டும்.
பயணச் சலுகை: அலுவல் ரீதியான பயணங்களுக்கு அனைத்து ஊழியர்களும் விமானத்தில் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
6. மேலதிக வேலை நேரம் (Overtime)
ஊழியர் பற்றாக்குறையினால் அதிக நேரம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு, அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியைச் சேர்த்து ஒற்றை விகிதத்தில் (Single Rate) மேலதிக நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும். இரவு நேரப் பணிக்கான ஊதியத்தில் உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும்.
இது எப்போது அமலுக்கு வரும்?
கடந்த ஆண்டே 8-வது ஊதியக் குழுவிற்கான விதிமுறைகளை அரசு அறிவித்துவிட்டது. தற்போது ஊழியர் சங்கங்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. ஊதியக் குழு இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்து தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும். அரசின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகே இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும். இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் கையில் கிடைக்கும் நிகர ஊதியம் (Take-home pay) கணிசமாக உயரும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications