டெல்லி கலவரம் வழக்கு.. எஃப்ஐஆர் கூட பதியாமல் மெத்தனம்.. போலீசுக்கு நீதிமன்றம் ரூ.25 ஆயிரம் அபராதம்
டெல்லி: டெல்லி கலவரம் தொடர்பான வழக்கை மெத்தனமாக விசாரிப்பதாக கண்டனம் தெரிவித்த டெல்லி நீதிமன்றம், காவல்துறைக்கு ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது.
கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் யாதவ், இந்த வழக்கில் சிறப்பு அதிகாரி பஜான்புரா மற்றும் பிற அதிகாரிகள் தங்கள் சட்டரீதியான கடமைகளை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி கலவரத்தின்போது முகமது நசீர் என்பவரின் இடது கண்ணில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. நரேஷ் தியாகி என்பவர் துப்பாக்கியால் சுட்டதாக நசீர் குற்றம்சாட்டியிருந்தார். இந்த காயத்திற்கு ஜிடிபி மருத்துவமனையில் வைத்து அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு நசீர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்தும், டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை. எனவே, மெட்ரோபாலிட்டன் நீதிபதி முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 24 மணி நேரத்திற்குள் எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் போஜன்புரா சார்பில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே, டெல்லி போலீசார் நசீர் மீது நடந்த தாக்குதல் மட்டுமில்லாமல், அதே பகுதியில் மேலும் 6 பேர் பாதிக்கப்பட்டது குறித்தும் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இதை சுட்டிக் காட்டிய போலீசார், நசீர் விவகாரத்திற்காக மட்டும் தனியே ஒரு எஃப்ஐஆர் பதிவுசெய்ய தேவையில்லை என வாதம் முன் வைத்தனர்.
கூடுதல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யும்போது கூடுதலாக கிடைத்த விசாரணை விவரங்களை அதில் இணைப்போம் என்றும் போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி, 2020ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி, புகார் அளிக்கப்பட்டும், தனியாக எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. எனவே சீராய்வு மனுவிற்கு முகாந்திரம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எனவே சீராய்வு மனு டிஸ்மிஸ் செய்யப்படுகிறது. ரூ.25000 அபராதம் விதிக்கப்படுகிறது. டெல்லி வட கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர், இந்த பணத்தை, டெல்லி சட்ட சேவைகள் அத்தாரிட்டியிடம் இன்னும் ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
சீராய்வு மனு தாக்கல் செய்த மனுதாரர் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளிடமிருந்து இந்த பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள். பணியாற்றுவதில் அவர்கள் மோசமாக தோல்வியடைந்துள்ளனர். எனவே, கடந்த வருடம் அக்டோபர் மாதம் 29ம் தேதி, இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடரும். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.
டெல்லியில் கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் இஸ்லாமியர்கள் பலர் தாக்கப்பட்டனர். 53 பேர் வரை பலியாகினர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications