வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- புதிய புயல் உருவெடுக்குமா?
டெல்லி: வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வட இந்தியாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்க கடலின் வடமேற்கு பகுதி, ஒடிஷா- மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனையடுத்து அடுத்த 5 நாட்களுக்கு ஒடிஷாவில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது வங்க கடலில் புதிய புயலாக உருவெடுக்குமா? என்பது அடுத்த சில நாட்களில் தெரிய வரும் என்கின்றனர் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள்.
டெல்லி, மும்பையில்..: 62 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லி, மும்பையில் ஒரே நேரத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து கொட்டிக் கொண்டிருக்கிறது. 1961-ம் ஆண்டு ஜூன் 21-ல் டெல்லி மற்றும் மும்பையில் ஒரே நேரத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. அதேபோன்ற நிலைமை தற்போது மீண்டும் திரும்பி இருக்கிறது.
பொதுவாக டெல்லியில் பருவமழை ஜூன் 27-ல் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 2 நாட்களுக்கு முன்னதாக பருவமழை தொடங்கிவிட்டது. மத்திய பிரதேசம், உ.பி. டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஹரியானா, குஜராத். ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களிலும் பருவமழை தொடங்கி இருக்கிறது. நாட்டில் தென்மேற்கு பருவமழை தொய்வின்றி பெய்து வருவதாகவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரபிக் கடல்: அரபிக் கடலில் அண்மையில் உருவான புயல், அதனைத் தொடர்ந்து கேரளா உள்ளிட்ட அரபிக் கடலோர மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்தது. அரபிக் கடல் புயலால் தென்மேற்கு பருவமழை அரபி கடலோர மாநிலங்களில் சற்று தாமதமாகவே தொடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications