Bihar SIR: "ஆதார் என்பது குடியுரிமைக்கான சான்று இல்லை.." மிக தெளிவாக சொன்ன உச்ச நீதிமன்றம்
டெல்லி: பீகாரில் SIR நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் ஆதார் என்பதைக் குடியுரிமைக்கான சான்று இல்லை என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றது. மேலும், ஒருவர் இந்தியக் குடிமகன் என்பதை நிரூபிக்க ஏதேனும் ஆவணம் இருக்க வேண்டும் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், ஆதார் என்பது குடியுரிமைக்கான சான்றிதழ் இல்லை என்றும் அடையாளத்தை அங்கீகரிப்பது மட்டுமே என்று தெரிவித்துள்ளது.
பீகாரில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குச் சார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளன. இது பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பாகப் பல்வேறு அமைப்புகளும் வழக்கு தொடர்ந்துள்ளன. உச்ச நீதிமன்ற நீதிபதிகளான சூர்யா காந்த் மற்றும் ஜாய்மால்யா பக்சி அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது

சுப்ரீம் கோர்ட்
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று காரசார விவாதம் நடந்தது. குறிப்பாக ஆதார் அட்டையைக் குடியுரிமைக்கான உறுதியான ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்தார். இந்தியக் குடியுரிமையை உறுதிப்படுத்த மற்ற ஆவணங்களும் சரிபார்க்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் கோபால் சங்கரநாராயணன் சில முக்கிய வாதங்களை முன்வைத்தனர். ஆதார் ரேஷன் கார்ட் உள்ளிட்டவற்றைக் கூட தேர்தல் ஆணையம் ஆவணமாக ஏற்பதில்லை என்று மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கபில் சிபல்
மேலும், இந்த வழக்கு விசாரணையின்போது, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பொதுமக்கள் தங்கள் குடியுரிமையை உறுதி செய்வதில் உள்ள சவால்களை முன்வைத்தார். பீகாரில் 3.056% மக்களிடம் மட்டுமே பிறப்புச் சான்றிதழ் இருப்பதாகவும் 2.7% பேரிடம் மட்டுமே பஸ்போர்ட் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், 14.71% பேர் மட்டுமே பத்தாம் வகுப்பு தேர்ச்சிச் சான்றிதழை வைத்துள்ளதாகக் கூறினார்.
ஆதார் குறித்து கருத்து
அப்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், "நீங்கள் இந்தியக் குடிமகன் என்பதை நிரூபிக்க ஏதேனும் ஆவணம் இருக்க வேண்டும். ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒரு சான்றிதழ் உள்ளது, சிம் கார்டு வாங்கக்கூட அது தேவைப்படுகிறது. மேலும், ஆதார் குடியுரிமைக்கான முழுமையான ஆதாரம் அல்ல என்று தேர்தல் ஆணையம் கூறுவது சரியே. அதைச் சரிபார்க்க வேண்டும்" என்றார். மேலும், ஆதார் குடியுரிமைக்கான ஆவணம் இல்லை என்பதைத் தேர்தல் ஆணையம் சொல்லவில்லை என்றும் ஆதார் சட்டமே அதைத் தான் சொல்வதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், இதில் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு சரியானது என்றும் ஏற்றுக்கொண்டனர்.
தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கா?
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மேலும், "இதைக் காட்டிலும் சார் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பது என்பதே இங்கு முதல் கேள்வி.. தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லையென்றால், அத்துடன் எல்லாம் முடிந்துவிடும். ஆனால், அவர்களுக்கு அதிகாரம் இருந்தால், எந்தப் பிரச்சனையும் இருக்காது" என்றார்.
இந்த வழக்கில் தொடர்ந்து காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் இந்தச் செயல்முறையில் முறைகேடுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் ஒட்டுமொத்த சார் செயல்முறையும் ரத்து செய்யப்படலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை நாளை மீண்டும் தொடரவுள்ளது.












Click it and Unblock the Notifications