விடுதலை... விடுதலை.. திகார் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார் ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங்
டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மியின் நாடாளுமன்ற குழு தலைவர் சஞ்சய் சிங்குக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் அவர் இன்று டெல்லி திகார் சிறையிலிருந்து வெளி வந்திருக்கிறார்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் மீதான மத்திய விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆம் ஆத்மி தலைவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டது பெரும் விவாதங்களை கிளப்பியது.

நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீவிரமாக குரல் எழுப்பியவர் ஆம் ஆத்மியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் சஞ்சய் சிங். இவர் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் கூட இதுவரை அவர் தரப்பிலிருந்து எந்த பணமும் கைப்பற்றப்படவில்லை. இந்நிலையில் ஜாமீன் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்கியது.
முன்னதாக நேற்று வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா மற்றும் பிபி வரலே ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு, 6 மாத காலமாக சிறையில் உள்ள சஞ்சய் சிங்கிடமிருந்து எந்த பணமும் கைப்பற்றப்படவில்லை என்றும் எனவே காவல் அவசியமா? எனவும் அமலாக்கத்துறைக்கு கேள்வி எழுப்பியது.
அமலாக்கத்துறை, ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில் நீதிபதிகள் சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்கினர். இதனையடுத்து இன்று இரவு 8 மணியளவில் அவர் டெல்லி திகார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
பின்னணி: கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார்.
இந்த முறைகேடுகள் மூலம் பெறப்பட்ட பெரும் தொகை கோவா சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தியிருந்ததாகவும் அமலாக்கத்துறை குற்றசம்சாட்டியது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் இறுதியாக கடந்த 21ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
இதே வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகள் கவிதாவும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications