ரேஸிலேயே இல்லாமல் கோட்டை விடும் காங்கிரஸ்.. பாஜகவின் மாற்று ஆம் ஆத்மி மட்டுமே?- டெல்லி எக்சிட் போல்
டெல்லி : இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி டெல்லி மாநகராட்சியை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கும் நிலையில், பாஜகவும் எதிர்கட்சியாக போட்டியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலை தான் மிக பரிதாபமாக உள்ளது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியில் இருக்கிறார்.
இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவானது நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவான வாக்கு சதவீதமே பதிவானது.
பாஜகவுக்கு பேரிழப்பு.. டெல்லியை தட்டித்தூக்கும் ஆம்ஆத்மி! மாநகராட்சி தேர்தல் கருத்துக்கணிப்பு ரிலீஸ்
டெல்லி தேர்தல்
டெல்லி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 250 மாநகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 709 பெண்கள் உட்பட 1349 வேட்பாளர்கள் களமிறங்கினர். நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி
இந்தியாவை ஆளும் பாஜகவும், டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் மாநகராட்சியை கைப்பற்ற பல பரிட்சை நடத்துகிறது. 250 வார்டுகளிலும் இரு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை களம் இறக்கி இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி 247 வார்டுகளில் மட்டுமே வேட்பாளர்களை அறிவித்து தேர்தளில் களம் கண்டது. இந்த தேர்தல் முடிவுகள் எட்டாம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. அதே நாளில் தான் குஜராத் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றன.
கருத்துக் கணிப்பு
அந்த மாநிலங்களில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகி இருக்கும் நிலையில் டெல்லி மாநகராட்சி தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளும் வெளியாகியிருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி டெல்லி மாநகராட்சி தேர்தலில் சுமார் 150 முதல் 170 வார்டுகள் வரை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றும் என இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிறது அதே நேரத்தில் 250 வார்டுகளில் போட்டியிட்ட பாஜக 69 முதல் 91 வார்டுகளை கைப்பற்றி பலமான எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் எனவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.
பாஜக ஆதிக்கம்
கடந்த 2011ஆம் ஆண்டில் டெல்லி மாநகராட்சி, தெற்கு டெல்லி, வடக்கு டெல்லி, கிழக்கு டெல்லி என 3 மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டன. மூன்று மாநகராட்சிகளிலும் அடிப்படை பணிகளில் தொய்வு, ஊழியர்களுக்கு சரியான தேதியில் சம்பளம் கொடுக்க இயலாமை போன்ற நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டன. இதனையடுத்து மூன்றும் ஒரே மாநகராட்சியாக இணைக்க சட்ட மசோத தாக்கல் செய்யப்பட்டது . கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்த 272 வார்டுகளில் பாஜக 181, ஆம் ஆத்மி 48, காங்கிரஸ் 30, மற்றவர்கள் 11 வார்டுகளில் வெற்றி பெற்றனர். அப்போது 272 வார்டுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அசுர வளர்ச்சி
அதற்கு முந்தைய 2007 மற்றும் 2012 தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் தான் தற்போதைய தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி டெல்லி மாநகராட்சியை கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. கடந்த மூன்று தேர்தல்களிலும் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆதிக்கம் செலுத்திய நிலையில் இடையில் வந்த ஆம் ஆத்மி கட்சி பலத்த போட்டியை அளித்தது. சட்டமன்றத் தேர்தலில் டெல்லியில் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் அசுர வளர்ச்சியை பெற்றுள்ள ஆம் ஆத்மி மாநகராட்சியையும் கைப்பற்றும் முனைப்பில் தேர்தலில் களம் கண்டது.
பரிதாப காங்கிரஸ்
எதிர்பார்த்தது போலவே டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றும் என தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் பாஜகவும் பலத்த போட்டி அளிக்கிறது. தற்போதைய தகவல்களின்படி சுமார் 90 இடங்கள் வரை பாஜக கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் நிலைமை தான் மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் 6 முதல் 10 இடங்கள் வரையே கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிலிருந்து காங்கிரஸ் வெளியேற்றப்பட்டதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். தேசிய அளவில் பலத்த பின்னடைவை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி தற்போது தலைநகர் டெல்லியிலும் பலத்த அடி வாங்க காத்திருக்கும் நிலையில் நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த தோல்வி எதிரொலிக்குமா என்பதே பேசு பொருளாக இருக்கிறது.