"இந்தியா என்ன உங்க அப்பா வீட்டு சொத்தா.." உச்சக்கட்ட கோபத்தில் கெஜ்ரிவால்.. பாஜக மீது சரமாரி தாக்கு
டெல்லி: சத்தீஸ்கரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
மத்திய அரசு வரும் திங்கள்கிழமை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிமுகப்படுத்த இருக்கும் மசோதாக்கள் குறித்து இணையத்தில் பல விதமான தகவல்கள் வெளியாகி வருகிறது.

குறிப்பாக, இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவது குறித்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்து மிக கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சத்தீஸ்கர்: இதற்கிடையே இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சில பரபர கருத்துகளைத் தெரிவித்தார். டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், இந்தியாவின் பெயர் மாற்றம் குறித்து பாஜகவைச் சரமாரியாகச் சாடினார்.
கடந்தாண்டு வரை பாஜக அரசு இந்தியா என்ற பெயரில் பல மத்திய திட்டங்களைக் கொண்டு வந்ததாகத் தெரிவித்த கெஜ்ரிவால், தற்போது எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கியுள்ள நிலையில், அதைக் கண்டு அஞ்சியே நாட்டின் பெயரை மாற்ற முயல்வதாகச் சாடியுள்ளார்.
அப்பா வீட்டுச் சொத்தா: அவர் மேலும் கூறுகையில், "இந்தியா உங்கள் அப்பா வீட்டுச் சொத்தா.. இது 140 கோடி மக்களுக்குச் சொந்தமானது. இந்தியா, பாரத், இந்துஸ்தான் ஆகியவை நமது இதயங்களில் வாழ்கிறது. நான் பாஜகவுக்கு வெளிப்படையாகவே சவால் விடுக்கிறேன். முடிந்தால் அவர்களுக்குத் தைரியம் இருந்தால் இந்தியாவின் பெயரை மாற்றட்டும். இதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
நாட்டில் உள்ள 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள கூட்டணியைக் கண்டு அஞ்சியே அவர்கள் இப்படிச் செய்துள்ளனர். இந்தக் கூட்டணியைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக, தேசத்தின் பெயரை பாரத் என்று மாற்றுவோம் என்று சொல்லும் அளவுக்குக் கோபமடைந்துள்ளது. நாளை எதிர்க்கட்சிக் கூட்டணி தங்களுக்கு பாரத் என்று பெயர் வைத்தால்.. நீங்கள் (பாஜக) நாட்டின் பெயரை மீண்டும் மாற்றுவீர்களா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ஆம் ஆத்மி: டெல்லியில் ஆளும் கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி தேசியளவில் பல மாநிலங்களில் தங்கள் கட்சியை விரிவுபடுத்த விரும்புகிறது. இதன் காரணமாகவே அவர்கள் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் இறங்கினார்கள். அதில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியையும் ஆம் ஆத்மி பிடித்தது. இது ஆம் ஆத்மிக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாகவே பல மாநிலங்களில் கட்சியை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் ஆம் ஆத்மி இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாகவே தேர்தல் நடைபெறும் சத்தீஸ்கரில் நடந்த பேரணியில் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். சத்தீஸ்கர் மாநிலத்தில் இப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் நிலையில், அங்கே இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறுகிறது. சத்தீஸ்கர் மட்டுமின்றி தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது. இதில் "இந்தியா" கூட்டணி ஒன்றாகப் போட்டியிடுமா அல்லது தனித்தனியாகக் களமிறங்குமா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications