கெஜ்ரிவாலுக்கு பறந்த லெட்டர்! ஆம் ஆத்மியில் இருந்து மூத்த அமைச்சர் கைலாஷ் கெலாட் விலகல்! என்னாச்சு
டெல்லி: தேசிய தலைநகரான டெல்லியில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே அக்கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி அமைச்சருமான கைலாஷ் கெலாட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகியுள்ள நிலையில், விரைவில் பாஜகவில் சேர வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் இப்போது ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. அங்குக் கடந்த 9 ஆண்டுகளாக முதல்வராக இருந்த கெஜ்ரிவால், கடந்த செப். மாதம் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

டெல்லி அரசியல்: டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் சில மாதங்களுக்கு முன்பு கெஜ்ரிவால் கைதாகிச் செய்யப்பட்டு இருந்த நிலையில், அவருக்குச் சமீபத்தில் தான் ஜாமீன் வழங்கப்பட்டது. சிறையில் இருந்து வெளியே அவர், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக இளம் தலைவரான அதிஷி டெல்லி முதல்வராகப் பதவியேற்றார். டெல்லியில் அடுத்தாண்டு தொடக்கத்தில் தேர்தல் நடக்கும் நிலையில், அதன் பின்னரே கெஜ்ரிவால் மீண்டும் முதல்வர் பதவியை ஏற்பார் எனத் தெரிகிறது.
இதற்கிடையே ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும் டெல்லி அமைச்சருமான கைலாஷ் கெலாட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். டெல்லி மூத்த அமைச்சரான கைலாஷ் உள்துறை, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு உள்ளிட்ட முக்கிய இலாகாக்களை கவனித்து வந்தார். அவர் திடீரென தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளது பேசுபொருள் ஆகியுள்ளது.
கைலாஷ் ராஜினாமா: ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கைலாஷ் ராஜினாமா கடிதத்தையும் எழுதியுள்ளார். ஆம் ஆத்மி கட்சிக்குள் கடுமையான சிக்கல்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கொண்டிருந்தால் டெல்லி அரசு வளர்ச்சியடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தில், "மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நமது அர்ப்பணிப்பை அரசியல் ஆசைகள் முந்திவிட்டன. நாம் பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. உதாரணத்திற்கு யமுனையை எடுத்துக் கொள்ளுங்கள்.. தூய்மையான நதியாக யமுனையை மாற்றுவோம் என்று நாம் உறுதியளித்தோம். ஆனால் அதைச் செய்ய முடியவில்லை. இப்போது யமுனை நதி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாசுபட்டுள்ளது.
சந்தேகம்: ஆம் ஆத்மியை சுற்றிப் பல சர்ச்சைகள் எழுந்துவிட்டன. மக்களுக்குச் சேவை செய்ய வேண்டி களத்திற்கு வந்த பழைய ஆம் ஆத்மி கட்சி தானா என்ற சந்தேகத்தை இது மக்களிடையே எழுப்புகிறது. ஆம் ஆத்மி கட்சி இப்போது தனது சொந்த அரசியல் நலனுக்காகவே போராடி வருகிறது.. இது டெல்லி மக்களுக்கு அடிப்படை சேவைகளை வழங்குவதற்கான திறனைக் கடுமையாகப் பாதித்து இருக்கிறது. டெல்லி அரசு பெரும்பாலான நேரத்தை மத்திய அரசுடன் மோதுவதற்கே செலவிடுகிறது. இதனால் டெல்லிக்கு உண்மையான முன்னேற்றம் ஏற்படாது என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது.
விலகுகிறேன்: டெல்லி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் நான் எனது அரசியல் பயணத்தைத் தொடங்கினேன். அதைத் தொடர்ந்து செய்ய விரும்புகிறேன். இதனால் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை. இதனால் ஆம் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுகிறேன். உங்கள் ஆரோக்கியத்திற்கும் எதிர்காலத்திற்கும் வாழ்த்துகள்" என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications