கேரளாவில் எல்.டி.எஃப் ஆட்சியை தக்கவைக்கும்..பினராயி விஜயன் மீண்டும் முதல்வர் - ஏபிபி சி வோட்டர்
கேரளாவில் இரண்டாவது முறையாக ஆளும் இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று பினராயி விஜயன் முதல்வராவார் என்று ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி: கேரளா மாநிலத்தில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி மீண்டும் வெற்றி பெறும் என்றும் இரண்டாவது முறையாக பினராயி விஜயன் முதல்வராவார் என்றும் ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. அங்கு மொத்தமுள்ள 140 இடங்களில் ஆளும் கட்சிக்கு 83 முதல் 91 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
கேரளாவில் ஒரே கட்சி தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சி அமைத்ததில்லை. ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் மாறி மாறி வெற்றி பெறும். எல்டிஎஃப், யுடிஎஃப் என மாறி மாறி கேரளாவை ஆண்டு வருகின்றனர்.
கேரளாவில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மே 2ஆம் தேதி வெளியாக உள்ளன. கேரளாவில் ஆளும் எல்டிஎஃப், எதிர்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப், பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

கேரளாவில் யார் ஆட்சி
சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. அந்த நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் அங்கு ஆளும் இடது ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது. 140 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 83-91 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் சிபிஐ (எம்) தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுடிஎஃப் கூட்டணி
எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணிக்கு 47 முதல் 55 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2016 ஆம் ஆண்டில் வென்ற இடங்களை விட அதிக எண்ணிக்கையாகும்.

பாஜகவில் 2 இடங்கள் மட்டுமே
கேரளாவில் பாஜக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. ஏபிபி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜகவிற்கு 0 முதல் 2 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பினராயி விஜயன் சாதிப்பாரா?
கேரளாவில் தொடர்ச்சியாக எந்த கட்சியுமோ இரண்டாவது முறையாக வென்றதில்லை. தமிழகத்தில் அந்த வரலாற்றினை மாற்றியவர் எம்ஜிஆர். அவருக்குப் பின்னர் ஜெயலலிதாவிற்கு அந்த பெருமை கிடைத்தது. 2011, 2016ஆம் ஆண்டுகளில் ஆளும் அதிமுக தொடர்ச்சியாக ஆட்சியை பிடித்தது. அதே போல இம்முறை கேரளாவின் அரசியல் வரலாற்றினை மாற்றுவார் என்று அம்மாநில இடது ஜனநாயக முன்னணி கட்சித் தொண்டர்கள் நம்புகின்றனர். அவர்களின் நம்பிக்கை ஜெயிக்கும் வகையில் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications