டெல்லியில் கொடூரம்.. கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசி தாக்குதல்.. நடுங்கிய தலைநகர்
டெல்லி: தலைநகர் டெல்லியில் 20 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முகத்தில் ஆசிட் வீச முயன்றபோது கல்லூரி மாணவி கைகளால் மறைத்ததால் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டெல்லியில் உள்ள முகுந்த்பூரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், அசோக் விஹாரில் உள்ள லட்சுமி பாய் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று வழக்கம் போல் மாணவி கல்லூரிக்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த நபர்கள் 3 பேர் திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை கல்லூரி மாணவியின் முகத்தில் வீசியுள்ளனர். விபரீதத்தை உணர்ந்த மாணவி உடனடியாக இரு கைகளாலும் முகத்தை மூடியுள்ளார்.
இதில் கைகளிலும் உடலின் சில இடங்களிலும் ஆசிட் பட்டுள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் கதறிய மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக தீப் சந்த் பந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் தடயவியல் நிபுணர்களும், போலீசாரும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து கல்லூரி மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதில் அந்த பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். ஜிதேந்தர் என்ற நபர் நீண்ட நாட்களாக பின் தொடர்ந்து வருவதாகவும், அவர் தான் தனது கூட்டாளிகள் அர்மான், இஷான் ஆகியோருடன் சேர்ந்து ஆசிட் தாக்குதல் நடத்தியதாகவும் கூறினார்.
ஜிதேந்தர் கல்லூரி மாணவி வசித்து வரும் அதே பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் கல்லூரி மாணவியிடம் பேச்சு கொடுத்துள்ளார். இருவரும் பேசி வந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவி அவரிடம் பேசவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் தனது நண்பர்களான இஷான் மற்றும் அர்மான் ஆகிய தனது கூட்டாளிகளுடன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளார். கல்லூரி மாணவியை பிந்தொடர்ந்து வந்துள்ளனர். அப்போது இஷான் ஒரு பாட்டிலை அர்மான் கைகளில் கொடுத்ததாகவும், அர்மான் அதைக்கொண்டு தன் மீது ஆசிட் வீசியதாகவும் கல்லூரி மாணவி தெரிவித்துள்ளார்.
என் மீது ஆசிட் வீசிவிட்டு அங்கிருந்து அவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றதாகவும் கூறினார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தலைநகர் டெல்லியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications