பாஜகவில் சேர்ந்த கையோடு சீட்.. பரம எதிரி ஆசம்கானை எதிர்த்து ஜெயப்பிரதா ராம்பூரில் போட்டி
பிரபல நடிகை ஜெயப்பிரதா பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
Recommended Video
டெல்லி: பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான ஜெயப்பிரதா பாஜகவில் இணைந்ததையடுத்து, உத்திர பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் உச்ச நடிகைகளில் ஒருவரான ஜெயப்பிரதா, கடந்த 1994-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து அரசியல் வாழ்வை தொடங்கினார்!
ஆனால் சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அங்கிருந்து விலகி சமாஜ்வாதியில் இணைந்தார். கடந்த 2004 மற்றும் 2009-ம் ஆண்டில் உத்தர பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆனார்.
வறுமை ஒழிப்பு... காங்கிரசுக்கு எப்பொழுதும் ஆயுதமா?... அருண் ஜெட்லி விளாசல்
ராம்பூர் தொகுதி
ஆனால் அங்கேயும் பிரச்சனை ஆரம்பமானது. அதனால் 2010-ம் ஆண்டில் சமாஜ்வாதியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு முக்கிய காரணம் அக்கட்சியின் மூத்த தலைவர் ஆசம்கான்தான்!
தனி கட்சி
இதையடுத்து, அமர் சிங்குடன் இணைந்து ராஷ்டிரிய லோக் மன்ச் என்ற கட்சியை தொடங்கினார். இந்த நிலையில், ஜெயபிரதா பாஜகவில் இணைய போவதாக செய்திகள் வலம் வர ஆரம்பித்தன. அதன்படி இன்று பாஜகவில் அதிகாரப்பூர்வமாக தன்னை இணைத்து கொண்டார்.
சமர்ப்பிக்கிறேன்
இதைப் பற்றி ஜெயப்பிரதா கூறுகையில், "சினிமா அல்லது அரசியல் எதுவாக இருந்தாலும் சரி, நான் எப்போதுமே என் சிறந்த முயற்சியைக் கொடுத்துள்ளேன். நான் டி.டி.பியிலும் பின்னர் சமாஜ்வாடி கட்சியிலும் பணிபுரிந்து வந்தேன், இப்போது நரேந்திர மோடியின் தலைவர்களுடன் நான் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது, இந்த கட்சிக்கும் நாட்டிற்கும் என்னை நானே சமர்ப்பிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஆசம்கான்
வரும் மக்களவைத் தேர்தலில் ராம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக அவர் போட்டியிடுவார் என்று சொல்லப்பட்டது. ஏனெனில் இந்த தொகுதியில் தான் ஆசம்கான் போட்டியிட உள்ளார். அதனால் ஆசம்கானை எதிர்கொள்ள சரியான நபர் ஜெயப்பிரதா தான் என பாஜக முடிவு செய்தது.
குற்றச்சாட்டு
அதன்படியே தற்போது, ராம்பூர் தொகுதி பாஜக வேட்பாளராக ஜெயப்பிரதா அறிவிக்கப்பட்டுள்ளார். யாரால் சமாஜ்வாதி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டாரோ அவரை எதிர்த்து போட்டியிட ஜெயப்பிரதாவும் தயாராகி விட்டதாக கருதப்படுகிறது. சமீபத்தில்கூட, "என் உயிருக்கு ஆபத்து, ஆசிட் வீசி ஆசம்கான் என்னை கொல்ல பார்க்கிறார்" என்று பரபரப்பு குற்றச்சாட்டை அளித்திருந்தார் ஜெயப்பிரதா.
புகைச்சல்
அந்த அளவுக்கு பரம எதிரிகளான இருவரும் ஒரே தொகுதியில் நிற்க போகிறார்கள். இந்த இருவரின் பழைய பஞ்சாயத்து, பழைய புகைச்சல், என எல்லாம் சேர்ந்து ராம்பூர் தொகுதியில் எப்படி எதிரொலிக்க போகிறதோ? பார்ப்போம்!