ஹைட்ரஜன் உற்பத்தியில் புதிய புரட்சி.. சாதனை படைத்த அதானி குழுமம்!
அகமதாபாத்: அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ANIL) நிறுவனம் இன்று இந்தியாவின் முதல் ஆஃப்-கிரிட் 5 மெகாவாட் பசுமை ஹைட்ரஜன் ஆலையை குஜராத்தின் கட்ச் பகுதியில் வெற்றிகரமாக இயக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. இது நாட்டின் தூய்மையான எரிசக்தி மாற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட இந்த ஆலை, 100% சூரிய சக்தியால் இயங்கும் பசுமை மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. மேலும், இது ஒரு பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புடன் (BESS) ஒருங்கிணைக்கப்பட்டு, முழுமையாக ஆஃப்-கிரிட் முறையில் செயல்பட உதவுகிறது. BESS என்பது மின் ஆற்றலைச் சேமித்து, தேவைப்படும்போது அதை வெளியிடும் ஒரு அமைப்பாகும். இது பொதுவாக லித்தியம்-அயன் போன்ற ரிச்சார்ஜபிள் பேட்டரிகளைக் இந்த அமைப்பு கொண்டிருக்கும்.

ஆஃப்-கிரிட் என்பது ஒரு அமைப்பு அல்லது வசதி பொது மின்சாரக் கட்டமைப்புடன் இணைக்கப்படாமல் தனித்து இயங்குவதைக் குறிக்கிறது. பொதுவாக, பெரும்பாலான வீடுகளும் தொழிற்சாலைகளும் மின்சாரத்தைப் பெற பொது மின் கட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால், ஆஃப்-கிரிட் முறையில் செயல்படும் ஒரு வசதி, தனது சொந்த மின்சாரத்தை தானே உற்பத்தி செய்து, அதைப் பயன்படுத்தி, உபரி மின்சாரத்தைச் சேமித்து, தேவைப்படும்போது அதைப் பயன்படுத்தும்.
சிம்பிளாக சொல்வதெனில், இந்த ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை இயங்குவதற்கு மத்திய அரசோ, மாநில அரசோ மின்சாரத்தை கொடுக்க வேண்டியதில்லை. இந்நிறுவனம், சூரிய ஒளியிலிருந்து தானாகவே மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதை ஹைட்ரஜன் உற்பத்திக்கு பயன்படுத்திக்கொள்கிறது.
எனவே இது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் ஹைட்ரஜன் உற்பத்தியில் ஒரு புதிய முன்னுதாரணத்தை உருவாக்குகிறது என்று நிறுவனம் கூறுகிறது. இந்த அமைப்பு இந்தியாவில் கனரக தொழில்துறை பிரிவுகளிலும் பசுமை ஆற்றலைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறது. இது நாட்டின் கண்டுபிடிப்பு, நிலைத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
குறைந்த கார்பன் வெளியேற்றம்
ANIL குழுமம், இந்த முயற்சியின் மூலம், இந்தியாவின் குறைந்த கார்பன் வெளியேற்றதிற்கான எதிர்காலத்திற்கான தனது பங்களிப்பை உறுதி செய்துள்ளது. புவி வெப்பமயமாதலுக்கு கார்பன் வெளியேற்றம்தான் முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை தயாரிப்பது கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்குகிறது.
இந்த முயற்சி மற்ற தொழிற்துறைகளிலும் கார்பன் வெளியேற்றம் 'பூஜ்ஜியமாக' இருக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது. தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் (NGHM), இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, தன்னிறைவை ஊக்குவிக்கிறது. இந்த ஆஃப்-கிரிட் அமைப்பு, ஆற்றல் மிகுந்த தொழில்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும், இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையான பசுமை ஆற்றல் தன்னிறைவை நோக்கிய பயணத்தில் ஒரு முக்கிய படியாகவும் அமைகிறது.
இந்த புதிய ஆஃப்-கிரிட் அமைப்பு, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைவதற்கும், நாட்டின் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான பங்களிப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications