"உங்கள் அதிகார வரம்பு இல்லை.." SEC முறைகேடு விவாகரத்தில்.. அமெரிக்க நீதிமன்றத்தை நாடிய அதானி
டெல்லி: அதானி தரப்பு மீது அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ள அதானி தரப்பு, இந்த வழக்கு அமெரிக்க அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்றும் கூறி அமெரிக்க நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) தொடர்ந்த மோசடி வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி, கௌதம் அதானியும் அவரது மருமகன் சாகர் அதானியும் அமெரிக்க நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இந்த வழக்கு அமெரிக்க அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்றும் சட்ட ரீதியாக அடிப்படையற்றது.. ஆதாரமற்றது என்பது அவர்களின் முக்கிய வாதம். ஏப்ரல் 30ம் தேதி இது மனுவாகத் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஒரு முன்மொழிவுக் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பின்னணி
இந்திய அரசு அதிகாரிகளை உள்ளடக்கிய லஞ்ச ஊழலை மூடிமறைத்து, முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தியதாக அமெரிக்காவின் SEC நவம்பர் 2024இல் குற்றம் சாட்டியது. இது 2021 அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் பத்திரங்கள் தொடர்பானதாகும். இருப்பினும், இதை அதானி தரப்பு திட்டவட்டமாக மறுக்கிறது. தங்களுக்கு அமெரிக்காவுடன் தொடர்பில்லை, பத்திர வழங்கலில் நேரடிப் பங்கில்லை என்பதால், அமெரிக்க நீதிமன்ற அதிகார வரம்பிற்குள் இது வராது என அதானி தரப்பு வாதிட்டது.
அதானி
750 மில்லியன் அமெரிக்க டாலர் பத்திர விற்பனை அமெரிக்காவிற்கு வெளியே (Rule 144A and Regulation S exemptions) நடந்தது. பத்திரங்கள் அமெரிக்காவில் பட்டியலிடப்படவில்லை.. சம்பந்தப்பட்ட நிறுவனமும் இந்தியாவில் தான் செயல்படுகிறது... அதாவது இந்த குற்றச்சாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பு இல்லை. கூறப்படும் முறைகேடுகளும் இந்தியாவிற்குள் நிகழ்ந்தன.
இதனால், SEC வழக்கு அமெரிக்கச் சட்ட வரம்பிற்கு அப்பாற்பட்டது என்றும், உள்நாட்டுப் பரிவர்த்தனைக்கான ஆதாரத்தை அது வழங்கவில்லை என்றும் அதானி தரப்பு வலியுறுத்தியுள்ளது. உள்நாட்டில் இதுபோல எதாவது நடந்திருந்தால் மட்டுமே அதை விசாரிக்கும் அதிகாரம் அமெரிக்காவுக்கு இருப்பதாக இதற்கு முன்பும் பல வழக்குகளில் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் கூறியுள்ள நிலையில், அதுவும் சுட்டிக்காட்டப்பட்டது.
முறைகேடு எதுவுமில்லை
மேலும், கௌதம் அதானி பத்திர வெளியீட்டை அங்கீகரிக்கவோ, அமெரிக்க முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தினார் என்பதற்கோ எந்தவொரு ஆதாரமும் இல்லை. 2024இல் பத்திரங்கள் முதிர்ச்சியடையும் வரை வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட்டதால், முதலீட்டாளர் இழப்பு இல்லை. லஞ்சம் புகார்களுக்கு நம்பகமான ஆதாரம் இல்லாததால் அதானிகள் அதை நிராகரித்தனர்.
தங்களைத் தவறான அறிக்கைகள்/மோசடி நோக்கத்துடன் இணைக்க SEC தவறிவிட்டது என அதானி தரப்பு தனது வாதத்தை முன்வைத்துள்ளது.. எனவே, வழக்கை முற்றிலுமாக தள்ளுபடி செய்யக் கோரியுள்ள அதானி தரப்பு, முன்மொழிவு மாநாட்டிற்கு ஆஜராகவும் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது..












Click it and Unblock the Notifications