அமெரிக்க அதிபரே.. ப்ளீஸ் நீங்க தான் உதவணும்.. இந்தியாவில் இருந்து கோரிக்கை விடுக்கும் ஆதார் பூனவல்லா
டெல்லி: கொரோனா தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க ஏதுவாக தடுப்பூசி மூலப்பொருட்களின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதார் பூனவல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டிலுள்ள மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு விரைவாக மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில் மகாராஷ்டிரா டெல்லி போன்ற சில மாநிலங்கள் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளன. தற்போதுள்ள தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குத் தடுப்பூசியின் உற்பத்தி இல்லை என்பது உண்மைதான்.
அமெரிக்க அதிபருக்குக் கோரிக்கை
இந்நிலையில் சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதார் பூனவல்லா அமெரிக்க அதிபர் பைடனுக்குக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், "மரியாதைக்குரிய அமெரிக்க அதிபரே, இந்த வைரஸை வெல்வதில் நாம் உண்மையிலேயே ஒன்றுபட வேண்டுமென்றால், தடுப்பூசிக்கு தேவையான மூலப்பொருள்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை நீக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க முடியும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
கோரிக்கை ஏன்
கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இதனால் அனைத்து அமெரிக்கர்களுக்கும் விரைவாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அந்நாட்டு அரசு விரைவாக மேற்கொண்டு வருகிறது. அங்கு அமெரிக்க நிறுவனங்களான பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க பைடன் அரசு பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தைப் பயன்படுத்தி, தடுப்பூசிக்குத் தேவையான மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்ய தற்காலிகமாக சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சிக்கல் இருப்பது உண்மைதான்
இந்தக் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என ஆதார் பூனவல்லா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு நேர்காணலில்கூட அவர் கூறுகையில், தடுப்பூசி உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது உண்மைதான். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசி தயாரிக்கத் தேவையான முக்கிய மூலப் பொருட்களுக்குத் தடை விதித்துள்ளன. இது கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான தீர்வை கண்டுபிடிக்கும் பணிகளில் இறங்கியுள்ளோம் என்றார்.
சீரம் நிறுவனம்
சர்வதேச அளவில் அதிக அளவிலான மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனமாக பூனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் உள்ளது. ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. சர்வதேச அளவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் சீரம் நிறுவனம் மிக முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.