மோடிக்கு "திலகமிட்ட" ஆதினங்கள்.. பிரதமரிடம் "செங்கோல்" ஒப்படைப்பு.. டெல்லியில் சுவாரசியம்
டெல்லி: நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ள செங்கோலை ஆதினங்கள் பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தனர்.
எந்தவொரு ஜனநாயக நாட்டிற்கும் கோயில் என்றால் அது அந்நாட்டின் நாடாளுமன்றம் தான். நாட்டின் மக்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நாடாளுமன்றத்தில் தான் விவாதித்து முடிவெடுப்பார்கள்.
இதன் காரணமாகவே நாடாளுமன்றத்தைக் கோயில் எனக் குறிப்பிடுவார்கள். நமது நாட்டை பொறுத்தவரை மக்களவை மற்றும் மாநிலங்களவையைக் கொண்ட இந்திய நாடாளுமன்றம் டெல்லியில் இருக்கிறது.

புது நாடாளுமன்ற கட்டிடம்:
இந்த நாடாளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. இங்கே இடவசதி போதுமானதாக இல்லை, நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டிடம் இல்லை எனத் தொடர்ச்சியாகப் பல புகார்கள் பழைய நாடாளுமன்ற மீது உள்ளது. இதையெல்லாம் ஆய்வு செய்தே மத்திய அரசு நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடத்தைக் கட்ட முடிவு செய்தனர். பழைய கட்டிடத்தை இடிக்காமல் அதற்கு அருகே புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காகக் கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
கொரோனா காலத்திலும் இந்த கட்டுமான பணிகளுக்கு மட்டும் சிறப்பு அனுமதி தரப்பட்டு கட்டுமானம் விறுவிறுவென நடைபெற்றது. இப்போது நாடாளுமன்ற கட்டிடக் கட்டுமான பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்ட நிலையில், இந்த கட்டிடத்தை வரும் 28 ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதற்கிடையே நாடாளுமன்றத்தில் மக்களவை தலைவரின் இருக்கைக்கு அருகே வரலாற்றுச் சிறப்பு மிக்க சோழர் கால மாதிரி செங்கோல் நிறுவப்படும் அறிவிக்கப்பட்டது.

செங்கோல்" இது நாடு சுதந்திரம் அடைந்த போது, தமிழக ஆதினத்தால் பிரதமரிடம் வழங்கப்பட்டது. இதைத்தான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவ முடிவு செய்துள்ளனர். இது மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே நிறுவப்பட உள்ளது. இதற்கிடையே நாளை நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் நிலையில், தமிழக ஆதினங்கள் டெல்லி சென்றுள்ளனர்.
இதற்கிடையே மத்திய கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் டெல்லி வந்துள்ள ஆதினங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் வைத்துச் சந்தித்தார். அவர்களிடம் இருந்து ஆசியும் பெற்றார்.
பிரதமரிடம் ஒப்படைப்பு:
அப்போது நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதினம் செங்கோலை வழங்கினார். மேலும், மதுரை, தருமபுரி ஆதினங்கள் பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

ஆதினங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு திலகமிட்டு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் உடன் இருந்தார்.
இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவிலும் அரசியல் சாயம் ஏற்பட்டுள்ள. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்கக் கூடாது என்றும் குடியரசுத் தலைவரே இந்தப் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்து வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றனர். இதை வலியுறுத்தி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்றத்தைத் திறக்கும் விழாவைப் புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளன.
இந்தச் சூழலில் தான் பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாளை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.












Click it and Unblock the Notifications