டெல்லியில் யாரை வணங்கியிருக்கார் பாருங்க ஓபிஎஸ்.. ‘பிள்ளையார்’ பிடிக்கப் போய் குரங்கு வந்த கதையா..!?
டெல்லி : அதிமுகவில் நிலவி வரும் பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் டெல்லி சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற வளாகத்தில் குரங்கு ஒன்றை கைகூப்பி வணங்கியுள்ளார்.
Recommended Video
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்றார் ஓ.பன்னீர்செல்வம்.
நாடாளுமன்ற வளாகத்தில் குரங்குகள் திரிந்ததைப் பார்த்த ஓ.பி.எஸ், ஒரு குரங்கைப் பார்த்து கைகூப்பி வணங்கினார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பொதுக்குழு மோதல்
பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையேயான மோதல் வெளிப்படையாகவே நடைபெற்றது. பொதுக்குழு பாதியில் கலைந்து, மீண்டும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அறிவித்த நிலையில், அதிமுகவில் பரபரப்பு நீடித்தது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இரு தரப்பினருமே தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

டெல்லி கிளம்பிய ஓபிஎஸ்
அப்போது, பா.ஜ.க தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் தனித்தனியாகச் சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முக்கு ஆதரவு தர வேண்டினர். மேலும், வேட்பு மனு தாக்கல் செய்யும்போது டெல்லி வரவும் வேண்டுகோள் விடுத்தனர். பொதுக்குழு குழப்பங்களுக்கு மத்தியில் அன்று இரவே டெல்லி கிளம்பினார் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார், எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.பி கோபாலகிருஷணன் உள்ளிட்டோரும் டெல்லி சென்றனர்.

நாடாளுமன்றத்தில்
டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்டோர் நேற்று நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் பங்கேற்றனர். இந்த நிகழ்வின்போது பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரைச் சந்தித்துப் பேசினர். தொடர்ந்து, பிரதமர் மோடியிடம் பேச ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், பிரதமர் மோடி நேரம் ஒதுக்காததால் இருவரும் தனிப்பட்ட முறையில் சந்தித்துக் கொள்ளவில்லை.

குரங்குக்கு வணக்கம்
இந்நிலையில், இன்று மாலை சென்னை திரும்பியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம் நேற்று நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றிப் பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தில், நாடாளுமன்ற வளாகத்தில் சுற்றித் திரிந்த குரங்கைக் கையெடுத்துக் கும்பிட்டு வணங்குகிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications