என்டிஏ ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு!
சென்னை: டெல்லியில் பாஜக கூட்டணிக்கட்சி எம்பிக்களுடன் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி முறைப்படி பிரதமராக தேர்வு செய்யப்படவுள்ளார். இதில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லி சென்றனர்.
இதைத்தொடர்ந்து வரும் 30 ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார். அன்றைய நாளில் அவரது புதிய அமைச்சரவையும் பதவியேற்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதற்காக அவர்கள் டெல்லி சென்றுள்ளனர். டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று டெல்லி சென்றுள்ள அவர்கள் இன்று மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இதைத்தொடர்ந்து வரும் 30 ஆம் தேதி நடைபெறும் பிரதமர் பதவியேற்பு விழாவிலும் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. தேனி மக்களவை தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத்குமார் மட்டும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications