அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடை.. பாஜக தான் வழக்கம் போல டாப்! காங்கிரஸை விட 10 மடங்கு அதிகம்
டெல்லி: கடந்த 2022- 2023 நிதியாண்டில் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள் ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வேலையை ஆரம்பித்துள்ளன. கூட்டணி, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.

நன்கொடை: இதற்கிடையே கடந்த 2022- 2023 நிதியாண்டில் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள் ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி 2022-23 நிதியாண்டில் அதிக நன்கொடையைப் பெற்ற அரசியல் கட்சியாக பாஜக இருக்கிறது. அதிகபட்சமாக பாஜக கடந்த நிதியாண்டில் மட்டும் 7,945 பேரிடம் இருந்து ₹719.858 கோடி நன்கொடைகளைப் பெற்றுள்ளதாக ஏடிஆர் அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2021- 2022 நிதியாண்டில் பாஜக ரூ. 614.626 கோடியை நன்கொடையாகப் பெற்ற நிலையில், ஒரே ஆண்டில் அதன் நன்கொடை 17.12 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய கட்சிகள்: ஒட்டுமொத்தமாகத் தேசிய கட்சிகளை எடுத்துக் கொண்டால்.. 2022-23 நிதியாண்டில் அனைத்து தேசியக் கட்சிகளும் 12,167 பேரிடம் இருந்து ₹850.438 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது. இதில் முதலிடத்தில் முன்பே குறிப்பிட்டது போல பாஜக இருக்கும் நிலையில், இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் இருக்கிறது. இருப்பினும், பாஜக பெற்ற நன்கொடையில் சுமார் 10இல் ஒரு பங்கு தான் காங்கிரஸ் கட்சிக்கு வந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் பெற்ற நன்கொடை: காங்கிரஸ் கட்சிக்குக் கடந்தாண்டில் 79.924 கோடி ரூபாய் மட்டுமே நன்கொடையாகக் கிடைத்துள்ளது. இது முந்தைய நிதியாண்டு உடன் ஒப்பிடுகையில் 16.27% குறைவாகும். அதேபோல சிபிஎம் நன்கொடை 3.97 கோடியாகவும் (39.56% சரிவு), ஆம் ஆத்மி ₹1.143 கோடியாக (2.99% சரிவு) இருக்கிறது.
இந்தக் காலகட்டத்தில் ரூ 20,000க்கு மேல் எந்த நன்கொடையும் பெறவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது. தொடர்ந்து 17ஆவது ஆண்டாகப் பகுஜன் சமாஜ் ரூ 20,000க்கு மேல் நன்கொடை பெறவில்லை என்று அறிவிப்பது குறிப்பிடத்தக்கது.
எங்கே அதிகம்: மாநில வாரியாக பார்க்கும் போது டெல்லியிலிருந்து தான் தேசிய அரசியல் கட்சிகளுக்கு அதிகபட்ச நன்கொடை கிடைத்துள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு மொத்தம் ₹276.202 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. தொடர்ந்து குஜராத்தில் இருந்து ₹160.509 கோடியும், மகாராஷ்டிராவிலிருந்து ₹96.273 கோடியும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அரசியல் கட்சிகளுக்கு அதிகபட்சம் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து தான் நன்கொடை வந்துள்ளது. மொத்தத்தில் இந்த கட்சிகளுக்கு 3,318 நன்கொடைகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து வந்துள்ளது. மொத்தம் கிடைத்த நன்கொடையில் சுமார் 80%, அதாவது ₹ 680.495 கோடி காப்ரேட் நிறுவனங்களிடம் இருந்து வந்துள்ளது. மறுபுறம் 8,567 தனிநபர்கள் என்று வரும்போது 8567 பேர் ₹166.621 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர்.
ஏடிஆர் அமைப்பு: இது குறித்து ஏடிஆர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "2022-23 நிதியாண்டில் மற்ற அனைத்து தேசியக் கட்சிகளும் அறிவித்த கார்ப்பரேட் நன்கொடைகளின் மொத்தத் தொகையை விட (₹70.004 கோடி) எட்டு மடங்கு அதிகமாக பாஜக (₹610.491 கோடி) நன்கொடையாகப் பெற்றுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதில் ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்ட் முதலிடத்தில் இருக்கிறது.
ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்ட் அமைப்பு அதிகபட்சமாக பாஜகவுக்கு 256.25 கோடி நன்கொடை அளித்துள்ளது. தொடர்ந்து ஆம் ஆத்மிக்கு ரூ. 90 லட்சம் நன்கொடை அளித்துள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications