மணிப்பூர் கலவரம்.. 79 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மவுனத்தை கலைத்த பிரதமர் மோடி! என்ன சொன்னார்
டெல்லி: மணிப்பூரில் வன்முறை தொடர்ந்து வரும் நிலையில், 79 நாட்களுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பாக முதல்முறையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாகவே வன்முறை உச்சத்தில் இருந்து வருகிறது. அங்குக் குக்கி மற்றும் மைத்தேயி இன மக்கள் இடையே நிலவி வரும் கடும் மோதலே மணிப்பூர் இப்படி ஒட்டுமொத்தமாக முடங்க காரணமாகும்.

இந்த வன்முறை காரணமாக அங்கே பல வாரங்களாக இணையச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரை பிரதமர் மோடி எந்தவொரு கருத்தையும் கூறாமல் இருந்த நிலையில், சுமார் 2.5 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக இது குறித்து வாய் திறந்துள்ளார்,
மணிப்பூர் கலவரம்: மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் இருக்கிறார்கள். இதற்கிடையே அங்கே பெரும்பான்மையாக இருக்கும் மைத்தேயி இன மக்கள் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் மைத்தேயி மக்களைப் பழங்குடியினர் பிரிவில் சேர்த்தால் தங்களது உரிமை பாதிக்கப்படும் என்று அதற்குக் குக்கி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக மணிப்பூரில் மிக மோசமான வன்முறை ஏற்பட்டுள்ளது. அங்கே போலீசார், ராணுவப் படை என ஏகப்பட்ட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கே வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் வன்முறை தொடர்ந்தே வருகிறது. மேலும், அங்கே பல வாரங்களாக இணையச் சேவை கூட முடக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அங்கே வன்முறை கட்டுக்குள் வரவில்லை.
இந்தச் சூழலில் நேற்றைய தினம் மணிப்பூரில் குக்கி இனத்தைச் சேர்ந்த 2 பழங்குடியின பெண்களை அங்குள்ள ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். அந்த பெண்களிடம் சில இளைஞர்கள் அத்துமீறியும் உள்ளனர். மேலும், அந்த பெண்கள் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், நேற்று இந்த வீடியோ வெளியாகி பகீர் கிளப்பியிருந்தது.
பிரதமர் மோடி: இதற்கிடையே மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் மோடி முதல்முறையாகக் கருத்து தெரிவித்துள்ளார். அங்கே இனக் கலவரம் வெடித்து 79 நாட்களுக்குப் பிறகு, மாநிலத்தில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டு, பல ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் வசிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி ஒரு வழியாக இந்தப் பிரச்சினை குறித்து இன்று தனது கருத்துகளைத் தெரிவித்துவிட்டார். மணிப்பூர் வன்முறையைக் கண்டு தனது இதயம் வலிப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மணிப்பூர் வன்முறை குறித்து மட்டும் பேசாமல் காங்கிரஸ் ஆளும் இரண்டு மாநிலங்களிலும் வன்முறை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த ஜனநாயகக் கோவிலுக்கு அருகில் நிற்கும்போது, என் இதயம் வேதனையாலும் கோபத்தாலும் நிறைந்திருக்கிறது. மணிப்பூர் சம்பவம் எந்தவொரு நாகரீக சமுதாயத்திற்கும் வெட்கக்கேடான சம்பவம்..
மணிப்பூரில் பெண்களுக்கு நடந்ததை மன்னிக்கவே முடியாது. இந்த சம்பவம் நாட்டுக்கே அவமானகரமானது, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாநில முதல்வர்களும் சட்ட ஒழுங்கை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாகப் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். மணிப்பூர், சத்தீஸ்கர், ராஜஸ்தான் என எந்தவொரு மாநிலமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதில் சத்தீஸ்கர், ராஜஸ்தான் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் ஆகும்.
மவுனத்தைக் கலைத்தார்: மணிப்பூர் வன்முறை தொடர்பாகப் பிரதமர் மோடி கருத்து கூற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடக்கம் முதலே வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் சுமார் 2.5 மாதங்கள் அதாவது 79 நாட்களாகப் பிரதமர் மோடி இதில் எந்தவொரு கருத்தையும் கூறாமலேயே இருந்தார். இந்தச் சூழலில் தான் முதல்முறையாக அவர் இது தொடர்பாக வெளிப்படையாகக் கருத்து கூறியுள்ளார்.
இப்போதும் கூட அங்கே நிலவி வரும் இனக் கலவரம் குறித்தோ, கொலைகள் குறித்து, வீடுகள் தீவைக்கப்படுவது குறித்து பிரதமர் எந்தவொரு கருத்தையும் கூறவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகிறது.












Click it and Unblock the Notifications