மம்தாவுக்கு மேலும் தலைவலி.. மஹுவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு.. என்ன நடந்தது?
கொல்கத்தா: நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பணம் பெற்றதாக குற்றம் சாட்டுக்கு உள்ளான மஹுவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. லோக்சபா தேர்தலில் போட்டியிட மம்தா பானர்ஜி மஹுவா மொய்த்ராவுக்கு வாய்ப்பு வழங்கியுள்ள நிலையில், பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மஹுவா மொய்த்ரா. மக்களவையில் இவர் எழுப்பியிருந்த கேள்விகள் பெரிய அளவில் விவாதமானது. இவர் மொத்தம் 61 கேள்விகளை மக்களவையில் எழுப்பியிருந்தார். அதில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை.
எனவே, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக மொய்த்ரா மீது பாஜக குற்றம்சாட்டியது. இது தொடர்பாக பாஜக எம்பி கொடுத்த புகாரின் அடிப்படையில், மொய்த்ரா எம்பி பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மட்டுமல்லாது, இவர் மீதான குற்றச்சாட்டை விசாரித்த லோக்பால் அமைப்பு, மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி சிபிஐ-க்கு உத்தரவிட்டது.
விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்கவும், விசாரணை முன்னேற்றத்தை ஒவ்வொரு மாதமும் அறிக்கையாக தாக்கல் செய்யவும் தனது உத்தரவில் கூறியிருந்தது. இதனிடையே, மொய்த்ரா தொடர்புடைய இடங்களில் கடந்த மாதம் 23 ஆம் தேதி சிபிஐ சோதனை மேற்கொண்டது.
இந்நிலையில், மஹுவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது . மஹுவா மொய்த்ரா மட்டும் இன்றி தொழில் அதிபர் தர்ஷன் ஹிரண்ந்தனி மீதும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் பணமோசடி பிரிவில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

மஹூவா மொய்த்ரா கடந்த டிசம்பர் மாதம் எம்பி பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது பாஜக கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது. விசாரணை அமைப்புகளும் வழக்குப் பதிவு செய்துள்ளன. இருப்பினும், அவருக்கு மீண்டும் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமை நாடளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருக்கிறது.
எதிர்வரும் லோக்சபா தேர்தலில் அவர் மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். தன் மீதான குற்றச்சாட்டை துவக்கத்தில் இருந்தே நிராகரித்து வந்த மஹுவா மொய்த்ராவுக்கு தற்போது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து இருப்பது கடும் நெருக்கடியை கொடுப்பதாக உள்ளது.












Click it and Unblock the Notifications