ட்விஸ்ட்.. பிகே மீட்டிங் முடிந்ததும்.. அழைப்பு விடுத்த பவார்.. அணி சேரும் எதிர்கட்சிகள்?.. நாளை மீட்
டெல்லி: பாஜகவிற்கு எதிராக மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும் வகையில் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பல்வேறு கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் நாளை எதிர்க்கட்சிகளின் முக்கிய கூட்டணி நடக்க உள்ளது.
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் ஐபேக் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பங்கு மிக முக்கியமானது. தமிழ்நாட்டில் திமுகவிற்கும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் திட்டங்களை வகுத்து கொடுத்ததில் பிரசாந்த் கிஷோர் முக்கிய பங்கு வகித்தார்.
சிக்ஸர்.. தவற விட்ட மோடி அரசு.. தட்டி தூக்கிய ஸ்டாலின்! அசரடிக்கும்
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இவர் நாடு முழுக்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். பாஜகவிற்கு எதிராக எதிர்கட்சித் தலைவர்களை, மாநில முதல்வர்களை இவர் ஒன்று திரட்டி வருவதாக பேச்சு அடிபடுகிறது.
மேற்கு வங்கம்
5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின் அரசியல் ஆலோசகர் பொறுப்பில் இருந்து ஒதுங்குவதாக பிரஷாந்த் கிஷோர் அறிவித்த நிலையில், அவர் இந்த திடீர் சந்திப்புகளை நடத்தி வருகிறார். 2024ல் எதிர்க்கட்சிகள் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும்.. இப்போது முதலில் கொரோனாவை வீழ்த்த வேண்டும் என்று ஏற்கனவே வெளிப்படையாக் பிரசாந்த் கிஷோர் பேசி இருந்தார். மம்தாவை தலைமையாக கொண்டு, எதிர்கட்சிகளை ஒரு குடைக்கு கீழ் கொண்டு வர பிரசாந்த் கிஷோர் முயல்கிறாரா என்று கேள்வி ஏற்கனவே எழுந்தது.
சந்திப்பு
இந்த நிலையில்தான் பிரசாந்த் கிஷோர் மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார் உடன் சந்திப்பு நடத்தினார். கடந்த 11ம் தேதி இவர்கள் இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அதை தொடர்ந்து இன்றும் இவர்களுக்கு இடையில் ஆலோசனை நடந்தது. எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி குறித்த ஆலோசனை இது என்று கூறப்பட்டது.
அழைப்பு
இந்த நிலையில்தான் பிகே மீட்டிங்கிற்கு பின் எதிர்க்கட்சிகள் அனைத்திற்கும் சரத் பவார் அழைப்பு விடுத்துள்ளார். பாஜகவிற்கு எதிராக திமுக, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், சிபிஎம் என்று எல்லோருக்கும் அழைப்பு விடுத்து இருக்கிறார். பாஜகவில் இருந்து விலகிய யஷ்வந்த் சின்கா மற்றும் சரத் பவார் சார்பாக இந்த அழைப்பு சென்றுள்ளது.
நாளை
நாளையே ஆலோசனை கூட்டம் நடத்தும் "மிஷன் 2024" என்பதை மனதில் வைத்து இந்த மீட்டிங் நடத்தப்பட உள்ளது. 2024ல் எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றாக பாஜகவை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை கொள்கையை மனதில் வைத்து இந்த கூட்டம் நடக்க உள்ளது. பல்வேறு கூட்டணிகளை வெற்றிகரமாக உருவாக்கிய சரத் பவார் இந்த கூட்டணியை உருவாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பிக்கை
மேற்கு வங்க தேர்தல் உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு பின் பாஜகவை முறையாக எதிர்கொண்டால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை எதிர்க்கட்சிகளுக்கு வந்துள்ளது. இதனால் முறையான திட்டங்களுடன் பாஜகவை எதிர்கொள்ளும் விதமாக பல்வேறு மாநில காட்சிகளை ஒருங்கிணைக்க பிகே - சரத் பவார் முடிவு செய்துள்ளார். இப்போதே கூட்டணியை வடிவைக்கும் முடிவை எடுத்துள்ளனர்.
3 ஆண்டுகள்
3 ஆண்டுகள் களப்பணியை செய்து, தேர்தலை எதிர்கொள்ளும் முடிவிலும், லோக்சபா, ராஜ்யசபாவில் பாஜகவிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலும் கூட்டணியை உருவாக்க உள்ளனர். இது தொடர்பாக நாளை நடக்கும் எதிர்க்கட்சி கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும். நாளை இந்த கூட்டத்தில் எந்தெந்த கட்சிகள் எல்லாம் கலந்து கொள்ளும் என்ற விவரம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.