பிபிசி நிறுவனத்தில் வருமான வரி ஆய்வு.. ஏன் தெரியுமா? உரிமையாளர், தலைமையிடம் எங்குள்ளது? முழு விபரம்
பிபிசி செய்தி நிறுவனம் 2002 குஜராத் கலவரம் குறித்து 2 ஆவணப்படங்களை வெளியிட்டது. இந்நிலையில் டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி ஆவணப்பட அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
டெல்லி: 2002 குஜராத் மதகலவரம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் 2 ஆவணப்படங்களை தயாரித்து வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியதால் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் தான் இன்று டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரி ஆய்வு (சர்வே) நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு எதற்காக நடக்கிறது? அந்த நிறுவனம் எப்படி செயல்படுகிறது? அதன் உரிமையாளர் யார்? என்பது பற்றி நிறைய பேர் இணையதளங்களில் தேட தொடங்கி உள்ளனர். அதற்கு தீர்வு வழங்கும் வகையில் பிபிசி நிறுவனம் பற்றிய வருமாறு:
இந்தியாவில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இன்று நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் மொத்தம் 60க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்து அரசை ஏமாற்றியதாக கூறப்படும் நிறுவனங்களை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முக்கிய ஆவணங்களை கைப்பற்றி வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பிபிசி நிறுவனங்களில் ஆய்வு
இந்த சோதனையின் ஒருபகுதியாக டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி ஊடக அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின்போது பிபிசி நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் இந்தியாவில் அந்த நிறுவனம் சார்ந்த முக்கிய விபரங்கள், ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. வரி ஏய்ப்பு சார்ந்த புகாரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.

பிபிசி ஆவணப்படத்தை தொடர்ந்து..
அதாவது கடந்த 2002ம் ஆண்டு குஜராத் கோத்ரா ரயில் எரிப்பில் சாதுக்கள் உள்பட இந்து யாத்ரீகர்கள் பலியாகினர். இதைத்தொடர்ந்து பெரிய அளவில் மதகலவரம் வெடித்தது. இதில் இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்டனர்.இந்த சம்பவத்தின்போது தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தான் குஜராத் முதல்வராக இருந்தார். இந்நிலையில் தான் சமீபத்தில் 2002 குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் 2 பகுதிகளாக ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டது. இதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட நிலையில் பலரும் தடையை மீறி ஒளிபரப்பு செய்தனர். இது பெரும் விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில் தான் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் பிபிசி நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பிபிசி பற்றிய தேடல்
இது ஒருபுறம் இருக்க பலரும் தற்போது பிபிசி செய்தி நிறுவனம் பற்றி இணையதளங்களில் தேட தொடங்கி உள்ளனர். அதாவது பிபிசி நிறுவனம் யாருக்கு சொந்தமானது, அதன் செயல்பாடு என்ன? என்பது பற்றி இணையதளங்களில் தேட தொடங்கி உள்ளனர். அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தான் இந்த செய்தி வழங்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

பிரிட்டன் நிறுவனம்
பிபிசி என்பதன் விரிவாக்கம் பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் என்பதாகும். இது லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனமாகும். இது ஒரு யுனைடெட் கிங்டம் எனும் பிரிட்டனின் தேசிய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. அதாவது பிரிட்டனின் பொதுத்துறை நிறுவனமாக இயங்குகிறது. உலகின் மிக பழமையான செய்தி ஒளிபரப்பு நிறுவனங்களில் ஒன்றாகவும், ஊழியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய ஒளிபரப்பு நிறுவனமாகவும் பிபிசி உள்ளது.

பொதுத்துறை நிறுவனமாக மாற்றம்
1914 முதல் 1918 காலக்கட்டத்தில் முதலாம் உலகப்போர் நடந்தது. இந்த போரை தொடர்ந்து பிரிட்டிஷ் வானொலி சேவை தொடங்கப்பட்டது. இதன் அடுத்தக்கட்டமாக 1922ல் பிபிசி தனியார் நிறுவனமாக செயல்பட தொடங்கியது. அதில் பிரிட்டனை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்குகள் கொண்டிருக்க முடிந்தது. இதையடுத்து 1925ம் ஆண்டு பிரிட்டன் நாடாளுமன்ற குழுவின் பரிந்துரையையொட்டி அந்த நிறுவனம் கலைக்கப்பட்டது. இதையடுத்து 1927ம் ஆண்டு பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் பொது நிறுவனமாக மாற்றம் செய்யப்பட்டது. அன்று முதல் இன்று வரை பிபிசி பிரிட்டனின் தேசிய ஒளிபரப்பு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

சுதந்திரமான செயல்பாடு
முதலில் வானொலியாக செயல்பட தொடங்கிய பிபிசி அதன்பிறகு பல்வேறு பரிணாமங்களை பெற தொடங்கியது. தற்போது தனி சுதந்திரம் பெற்ற செய்தி நிறுவனமாக பிபிசி செயல்பட்டு வருகிறது. பிபிசிக்கு என்று தனியாக அறக்கட்டளை உள்ளது. இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்கள் பிரிட்டன் மன்னரால் நியமிக்கப்படுகிறார்கள். இதில் 12 பேர் இடம்பெற்றுள்ளனர். இரண்டாம் உலகப் போரின் (1939-1945) போது இதன் பிபிசியின் செயல்பாடு இடைநிறுத்தம் செய்யப்பட்டது. அதன்பிறகு 1946ல் மீண்டும் தொடங்கியது.

செய்தி சேனல்
1964ல் பிபிசி தனது 2வது சேனலை தொடங்கியது. 1967ல் ஐரோப்பாவின் முதல் தொலைக்காட்சி சேவையை துவங்கியது. 1970ல் உள்ளூர் வணிக ஒலிபரப்புகளை சேனலுக்கு அந்நாட்டு அரசு அனுமதித்தது. இதனால் பிபிசியின் வானொலி சேவைகளுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டது. அதன்பிறகு 1982ல் வணிக ரீதியாக 2வது சேனல் தொடங்கப்பட்டது. 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் சுமார் 120 மில்லியன் மக்களுக்கு 40 மொழிகளில் பிபிசி சேவை கிடைக்கிறது. மேலும் 1991ல் வேர்ல்ட் சர்வீஸ் டெலிவிஷன் தொடங்கப்பட்டது. 1997ல் பிபிசி நியூஸ் 24X7 மணி நேர செய்தி சேனலாக அறிமுகம் செய்யப்பட்டது.

தொடரும் சர்ச்சை
அதன்பிறகு தொடர்ந்து பல்வேறு புதுமைகளை பிபிசி மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் அவ்வப்போது பிபிசி செய்தி நிறுவனங்கள் சர்ச்சைகளில் சிக்குவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இந்தியா உள்பட பிற நாடுகள் விஷயங்கள் தொடர்பான செய்திகளை வெளியிட்டு சர்ச்சைகளை கிளப்புவதோடு, பிரிட்டனிலும் கூட இந்த செய்தி நிறுவனம் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தும். 1987 ல் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் மார்க்ரெட் தாட்சருக்கு எதிராக பரப்புரை செய்தது, 1995ல் இளவரசி டயானாவை மன்னர் குடும்பத்துக்கு எதிராக பேச வைத்தது உள்ளிட்டவை பிரிட்டனில் பூகம்பத்தை ஏற்படுத்தியது. மேலும் அவ்வப்போது இந்தியா தொடர்பான விஷயங்களையும் கையில் எடுக்கும் பிபிசி சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை குஜராத் கலவரத்துடன் தொடர்புபடுத்தி ஆவணப்படம் வெளியிட்டதாக சர்ச்சையில் சிக்கியது. இதன் தொடர்ச்சியாக தற்போது வருமான வரி ஆய்வுக்கு உள்ளாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications