தலைவிதியை தீர்மானிக்கும் டெல்லி.. மீண்டும் ஒரு முறை நிரூபணம்.. 57 வருடங்களாக மாறாத தேர்தல் வரலாறு!
டெல்லி: நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் தலைநகர் டெல்லி, இந்த முறையும் யார் மத்தியில் ஆட்சிக்கு வருவது என்பதைச் சரியாகவே கணித்துள்ளது. டெல்லியின் 7 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளது பாஜக. அதோடு, தனிப்பெரும் கட்சியாக 240+ இடங்களில் வெற்றி பெற உள்ளது.
தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. டெல்லியில் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும் போட்டியிட்டது. பாஜக 7 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

டெல்லி முக்கியம்: மத்தியில் ஆட்சி அமைக்க 272க்கும் மேற்பட்ட சீட்களில் வென்றாக வேண்டும். உத்தர பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பெரிய மாநிலங்களில் கட்சிகள் பெறும் வெற்றி, மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பை எளிதாக்குகிறது. அதேசமயம், டெல்லியில் உள்ள வெறும் 7 லோக்சபா சீட்டுகளும், மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கின்றன என்பதுதான் இதுவரையிலான தேர்தல் வரலாறு.
அதாவது, தலைநகர் டெல்லியில், அதிக இடங்களைக் கைப்பற்றும் அரசியல் கட்சியே, மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இது காலம் காலமாக லோக்சபா தேர்தலில் நடைபெற்று வரும் காட்சி. கடந்த 2019 லோக்சபா தேர்தலிலும் இதுவே நடந்தது. டெல்லியின் 7 லோக்சபா தொகுதிகளையும் அலேக்காக கைப்பற்றிய பாஜக, அறுதிப் பெரும்பான்மையுடன் மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
1967 முதலே இதுதான் நிலை: 2019ல் தான் இந்த நிலையா என்றால், அதுதான் இல்லை. 1967 முதலே இதுதான் நிலை. அதாவது, 57 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, மத்தியில் ஆட்சியை தீர்மானிப்பதில் டெல்லி வாக்காளர்கள் முக்கிய பங்கை ஆற்றியுள்ளனர். நாட்டின் தலைவிதியை தீர்மானிப்பவர்களாக டெல்லி வாக்காளர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதே தொடர் தேர்தல் வரலாறுகள் உணர்த்தும் உண்மை.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளையும் மொத்தமாக அள்ளியது பாஜக. காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. ஒட்டுமொத்தமாக 303 தொகுதிகளில் வென்று மத்தியில் ஆட்சியை அமைத்தார் நரேந்திர மோடி. 2014 லோக்சபா தேர்தலிலும் பாஜக டெல்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளையும் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி தம் வசம் இருந்த 7 தொகுதிகளையும் இழந்ததோடு, மத்தியில் ஆட்சியையும் பறி கொடுத்தது.
காங்கிரஸ்: 2009 லோக்சபா தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளையும் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி. அந்த தேர்தலில் முந்தைய தேர்தலை விட அதிக இடங்களில் வென்று காங்கிரஸ் கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. 2004 லோக்சபா தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளில் 6 தொகுதிகளைக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி. பாஜக 1 தொகுதியில் மட்டுமே வென்றது. அந்த தேர்தலில் கூட்டணி ஆதரவுடன் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.
1999ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளையும் மொத்தமாக கைப்பற்றியது பாஜக. காங்கிரஸ் கட்சி முதல் முறையாக எல்லா இடங்களிலும் தோற்றது. அந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 182 சீட்களில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது பாஜக. வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைந்தது.
1998 லோக்சபா தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளில் 6 தொகுதிகளைக் கைப்பற்றியது பாஜக. காங்கிரஸ் கட்சி 1 தொகுதியில் மட்டுமே வென்றது. அந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 182 சீட்களில் வென்றது பாஜக. காங்கிரஸ் 141 இடங்களில் மட்டுமே வென்றது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது.
மெஜாரிட்டி போச்சே: 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளில் 5 தொகுதிகளைக் கைப்பற்றியது பாஜக. காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டுமே வென்றது. எனினும் அந்த தேர்தலில் நாடு முழுவதும் 244 சீட்களில் வென்றது காங்கிரஸ் கட்சி. 1991ல் டெல்லியை இழந்த காங்கிரஸ், பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. அதாவது 1952 முதல் நடைபெற்று வந்த தேர்தலில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடிக்க முடியாமல் போன தேர்தல் 1991 தான்.
1984ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளையும் முழுமையாகக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி. அந்த தேர்தலில் நாடு முழுவதும் 414 சீட்களைக் கைப்பற்றி ராஜீவ் காந்தி தலைமையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.
டெல்லியை பிடித்த ஜனதா ஆட்சியையும் பிடித்தது: 1977ல் காங்கிரஸ் கட்சி டெல்லியில் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை. தனி சின்னம் கூட இல்லாத ஜனதா கட்சி வேட்பாளர்கள் டெல்லியின் 7 தொகுதிகளையும் வென்றனர். ஒட்டுமொத்தமாக 295 இடங்களைப் பிடித்து ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது.
டெல்லியை பொறுத்தவரை எந்தக் கட்சிக்கும் நிலையாக வாக்களிக்கும் மக்கள் பெரும்பான்மையாக இருந்ததில்லை. சாதி, மதம் அங்கு பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தியது இல்லை. அப்போதைய அரசியல் சூழல்களே டெல்லியில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
கடந்த சட்டசபை தேர்தல்களில் 70ல் 67 தொகுதிகளை வென்றது ஆம் ஆத்மி. அடுத்த முறை 62 தொகுதிகளை வென்றது. அதேசமயம், லோக்சபா தேர்தல்களில் கடந்த 2 முறையுமே ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. ஏன், இரண்டாம் இடம் கூட பெரும்பாலான தொகுதிகளில் வர முடியவில்லை.
மீண்டும் மோடி: டெல்லியில் அதிக இடங்களில் வெல்லும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். குறைந்த இடங்களில் வெல்லும் கட்சி ஆட்சியை பறிகொடுக்கும் அல்லது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்திக்கும். அந்த வரலாறு இன்றைய முடிவிலும் நிரூபணமாகியுள்ளது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனில் வெளியே வந்து தீவிர பிரச்சாரம் செய்த நிலையிலும் ஆம் ஆத்மி கட்சியோ, காங்கிரஸோ ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. டெல்லியை முழுமையாக கைப்பற்றியுள்ள பாஜக, தனிப்பெரும் கட்சியாக 240+ சீட்களை பிடிக்க உள்ளது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.












Click it and Unblock the Notifications