இந்தியாவில் மீண்டும் வேகமாக உயர தொடங்கும் கொரோனா.. ஒரே நாளில் 5,880 பேருக்கு வைரஸ் பாதிப்பு! ஆபத்தா?
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஒரே நாளில் இப்போது 5880 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்தது. அதன் பிறகு நமது நாட்டில் மூன்று முறை கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. இதில் பாதிப்புகள் மிக மோசமாகவே இருந்தது.
அதிலும் குறிப்பாக இரண்டாவது அலையில் பாதிப்பு உச்சம் தொட்டது. நாட்டில் பல இடங்களில் படுக்கைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போது தீவிர பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், ஆக்சிஜன் தேவையும் கூட உச்சம் தொட்டது.

கொரோனா வேக்சின் பணிகள்: அதன் பிறகு நாம் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. கொரோனா வேக்சின்கள் தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படுவதை வெகுவாக குறைத்தது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா வேக்சின் பணிகள் மிகச் சிறப்பாகவே இருந்தது. 2 டோஸ் + 1 முன்னெச்சரிக்கை டோஸ் என்று 3 டோஸ் போடப்பட்டது.
இதுபோன்ற நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு மெல்லக் குறைந்து கட்டுக்குள் வந்தது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாகவே வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா மூன்றாம் அலைக்குப் பின்னர் தொடர்ந்து குறைந்து வந்த கொரோனா இப்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு: இதனிடையே நாடு முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா டெஸ்டிங் செய்யப்பட்ட நிலையில், அதில் ஒரே நாளில் 5880 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 5,357 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், இன்று வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 5880 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், நாட்டில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் 35,199ஆக உயர்ந்துள்ளது. தினசரி பாசிட்டிவிட்டி ரேட் 6.91 சதவீதமாகவும், வாராந்திர பாசிட்டிவிட்டி ரேட் 3.67 சதவீதமாகவும் உள்ளது. தினசரி கொரோனா எண்ணிக்கை பெரியளவில் உயரவில்லை என்றாலும் கூட கொரோனா பாசிட்டிவிட்டி ரேட் உயரும் நிலையில், வைரஸ் பாதிப்பை நாம் எச்சரிக்கையுடனேயே அணுக வேண்டும் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குணமடைந்தோர் விகிதம்: கொரோனாவில் இருந்து இதுவரை 44,196,318 பேர் குணமடைந்துள்ள நிலையில், குணமடைவோர் விகிதம் 98.74%ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த உயிரிழப்பு 53,09,79 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 205 டோஸ் வேக்சின்கள் போடப்பட்டன. நாடு முழுக்க இதுவரை மொத்தம் 220,66,23,527 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த வாரம் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
கொரோனா தடுப்பு ஒத்திகை: கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், எடுக்க வேண்டிய தேவையான நடவடிக்கைகள் குறித்து அதில் விளக்கப்பட்டது. மேலும், கொரோனா அதிகரிக்கும் நிலையில், நாடு முழுக்க பாதுகாப்பு ஒத்திகை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்றும் நாளையும் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
அதேநேரம் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கினாலும் கூட இதனால் மோசமான பாதிப்பு எதுவும் ஏற்படாது என்றே ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். வைரஸ் பாதிப்பு மீண்டும் சில நாட்களில் குறையத் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications