அக்னிபாத் போராட்டம்.. நாடு முழுக்க இன்று பந்த் கடைபிடிப்பு.. இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அபாயம்
டெல்லி: அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுக்க இன்று பந்த் நடத்த போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
திட்டத்திற்கு எதிராக போராடும் இளைஞர்கள் சார்பாக இந்த பந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மத்திய அரசின் இந்த திட்டத்தின்படி "அக்னிவீர் " எனப்படும் ராணுவ வீரர்கள் முப்படைகளில் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர்.
இவர்கள் 4 வருடம் மட்டுமே ராணுவ பணியில் இருப்பார்கள். இந்த திட்டத்திற்கு இளைஞர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

என்ன திட்டம்?
இந்த திட்டம் மூலம் பணிக்கு எடுக்கப்படும் இளைஞர்கள் முப்படைகளில் 4 வருடங்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை மாத சம்பளமாக வழங்கப்படும். இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு எதிராக மிக கடுமையான போராட்டங்கள் நாடு முழுக்க நடந்து வருகிறது. 4 வருடம் கழித்து இந்த இளைஞர்கள் என்ன வேலை பார்ப்பார்கள்? அவர்கள் எங்கே போவார்கள் என்ற கேள்வியை முன் வைத்து இளைஞர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். அதே சமயம் இவர்களுக்கு பென்ஷன் இல்லை.

போராட்டம் ஏன்?
அதனால் 4 வருடம் வேலை பார்த்தும் புண்ணியம் இல்லை. பணி முடித்ததும் 12 லட்சம் ரூபாய் வழங்கப்படுவதை தவிர பெரிதாக வேலை எதுவும் கிடைக்காத என்ற குற்றச்சாட்டு காரணமாக இளைஞர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். இதில் வருமானம் குறைவாக இருப்பதும் ஒரு காரணம். 4 வருடத்திற்கு பின் என்ன வேலை கிடைக்கும் என்ற கேள்வியை தொடர்ந்து இளைஞர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.

ரயில் நிலையங்கள்
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஹரியானா, டெல்லி, மேற்கு வங்கம், தெலுங்கானா என்று நாடு முழுக்க பல மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. நாடு முழுக்க 900 ரயில்களுக்கும் மேலாக இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. 80 ரயில் பெட்டிகள் தீ வைக்கப்பட்டு உள்ளன. 70க்கும் அதிகமான ரயில் சேவைகள் தினமும் நிறுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தை எதிர்த்து நாடு முழுக்க போராட்டங்கள் நடக்கும் நிலையில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பந்த் நடத்த போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

பந்த்
பந்த் காரணமாக ரயில் நிலையங்களில் இன்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடைகள், அலுவலகங்களை மூட கோரி போராட்டங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கேரளா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஒடிசா, பீகார், ஹரியானா, டெல்லி, மேற்கு வங்கம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பந்த் தீவிரமாக கடைபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்த் காரணமாக இன்று தேசிய அளவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications