அரசுக்கு டெலிகாம் நிறுவனங்கள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை.. உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்
டெல்லி: வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட தொலைதொடர்பு ஆபரேட்டர்களால் செலுத்த வேண்டிய ஏஜிஆர் நிலுவைத் தொகை தொடர்பான, வழக்கை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
மேலும், திவாலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்), ஏர்செல் மற்றும் வீடியோகான் டெலிகாம் ஆகியவற்றின் திவால் நிலை விவரங்களை 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு தொலைத்தொடர்பு துறைக்கு (டிஓடி) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட 15 தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள், உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகையில் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கி செலுத்த வேண்டியிருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான அமர்வு முன்னிலையில், விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் சார்பில் ரூ.9 ஆயிரத்து 500 கோடி தொகையும், பார்தி ஹெக்சாகாம் சார்பில் ரூ.500 கோடி தொகையும் , வோடபோன் ஐடியா நிறுவனம், ரூ.2,500 கோடியும் அரசுக்கு வழங்கியது. கடந்த பிப்ரவரி 20ம் தேதி, வோடபோன் ஐடியா நிறுவனம் மத்திய அரசின் தொலை தொடர்பு துறைக்கு ரூ.1,000 கோடி செலுத்தியது.
டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய நிலுவை தொகையான ரூ.14 ஆயிரம் கோடியில், கடந்த பிப்ரவரி 17ம் தேதி ரூ.2 ஆயிரத்து 197 கோடி செலுத்தி இருந்தது. பிறகு மேலும் ரூ.2 ஆயிரம் கோடியை தொலை தொடர்பு துறைக்கு மார்ச் மாதம் செலுத்தியது. அதே மாதம், வோடபோன் இந்தியா நிறுவனம் ரூ.3 ஆயிரத்து 42 கோடியும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.1,053 கோடியும், பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ.1,950 கோடியும் செலுத்தின.
இந்த வழக்கு இன்று, மீண்டும் அருண் மிஷ்ரா அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பொறுப்புகளில் இருந்து தப்பிக்க திவால் நிலை போன்றவற்றை காரணமாக காட்டக் கூடும். அவ்வாறு காரணம் காட்டப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் "சுய மதிப்பீட்டிற்கு இடமில்லை". டெலிகாம் நிறுவனங்கள், தொலைத்தொடர்பு துறை (டிஓடி) யால் கணக்கிடப்பட்ட ஏஜிஆர் நிலுவைத் தொகையைதான் செலுத்த வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்றம் கூறியது.
இருப்பினும் இந்த நிறுவனங்கள், திவாலாகுவதை தவிர்க்க நிலுவைத் தொகையை வழங்க காலக்கெடு வழங்கப்பட வேண்டும் என்று அரசு விரும்புகிறது.
வோடபோன் ஐடியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, தங்கள் நிறுவனத்தின் அனைத்து வருவாய்களும், வரி மற்றும் நிலுவைத் தொகைகளுக்காக செலவிடப்பட்டுள்ளன என்று ஆதங்கம் தெரிவித்தார்.
வோடபோன் ஐடியாவுக்கு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சுமார், 8,000 கோடி திரும்ப வர வேண்டியுள்ளது. இது அரசால் எங்களுக்கு தரப்படாமல் வைத்துக்கொள்ளப்படலாம் என்று முகுல் ரோஹத்கி பரிந்துரைத்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் சம்பாதித்த 27 6.27 டிரில்லியன் ரூபாய் மொத்த வருவாயில், 95 4.95 டிரில்லியன் செலவினங்களுக்காக போய்விட்டது என்றும் அவர் தனது வாதத்தில் தெரிவித்தார். பாரதி ஏர்டெல் நிறுவனத்திற்காக அபிஷேக் சிங்வி ஆஜரானார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தனர் நீதிபதிகள். பின்னர், இந்த வழக்கு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.