நெருங்கும் தேர்தல்கள்! மளமளவென குறையப்போகும் பெட்ரோல், டீசல் விலை? பிரதமர் மோடி ஆலோசனை! ஜாக்பாட்
டெல்லி: இந்தியாவில் 400 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் தான் அடுத்தடுத்து 5 மாநில சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பது பற்றி பிரதமர் மோடி ஆலோசித்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா, எகிப்து நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பினார். அவரை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் முக்கிய தலைவர்கள் வரவேற்றனர். இதையடுத்து இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தீவிர ஆலோசனை நடத்தினார்.

மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. இதையடுத்து சமீபத்தில் அமித்ஷா அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தி முக்கிய தகவல்களை பெற்று கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தமட்டில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்த விலை மாற்றம் செய்யப்படுகிறது. இதற்கிடையே தான் கடந்த 400க்கும் அதிகமான நாட்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் டீசல் 94.24க்கு விற்பனையாகி வருகிறது. பெங்களூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101.94 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.87.89க்கும் விற்பனையாகி வருகிறது. இதுதவிர பிற நகரங்களில் விலையில் சின்ன சின்ன மாற்றங்களுடன் பெட்ரோல், டீசல் விற்கப்படுகிறது.
இந்நிலையில் தான் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து இன்று பிரதமர் மோடி ஆலோசித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இதன் பின்னணியில் முக்கிய விஷயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் கச்சா எண்ணெய் விலை என்பது கட்டுப்படியாகும் வகையில் தான் உள்ளது. இதனை பயன்படுத்தி அதன் பலனை மக்களுக்கு வழங்க பிரதமர் மோடி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்தியாவில் இந்த ஆண்டு சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, மிசோராம் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இப்படி தொடர்ச்சியாக 6 தேர்தல்கள் அடுத்தடுத்து நடக்க உள்ளன.
இந்த வேளையில் ரூ.100யை தாண்டி விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் ரூ.90யை தாண்டிய டீசல் ஆகியவற்றின் விலையை குறைத்தால் மக்கள் மனதை வெல்லலாம் எனவும், இதன்மூலம் தேர்தலில் வெற்றியை அறுவடை செய்யலாம் எனவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசித்தது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications