சபாஷ்.. குஜராத்திற்கு ராகுல் போட்டுள்ள மாஸ்டர் பிளான்.. சத்தமில்லாமல் நடவடிக்கை தொடங்கிய காங்கிரஸ்
டெல்லி: குஜராத் மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், காங்கிரஸை அங்கு வலுப்படுத்தும் நடவடிக்கைகளைக் கட்சியின் தலைமை தொடங்கியுள்ளது.
பஞ்சாப், உத்தரகண்ட் என நாடு முழுவதும் 7 மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் தவிர மற்ற 6 மாநிலங்களிலும் பாஜகவே ஆளும்கட்சியாக உள்ளது.
எந்த மாநிலத்திலும் தோற்றுவிடக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதற்காக பாஜக தலைமை பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருகிறது.

குஜராத் சட்டசபைத் தேர்தல்
குறிப்பாகக் கடந்த 5 ஆண்டுகளாகக் குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக பூபேந்திரபாய் படேல் முதல்வராக நியமிக்கப்பட்டார். குஜராத் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால், அதைக் கூடுதல் கவனத்துடன் கையாள்கிறது பாஜக தலைமை. கடந்த 2017இல் நடந்த தேர்தலிலேயே பாஜக நூலிழையிலேயே பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டது. 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில் பாஜகவுக்கு 99 இடங்களும் காங்கிரசுக்கு 77 இடங்களும் உள்ளன. இதனால் தான் தேர்தலுக்கு ஓர் ஆண்டு உள்ள போதிலும் பாஜக தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டது.

காங்கிரஸ் நடவடிக்கை
அதேபோல காங்கிரஸ் கட்சியும் சத்தமில்லாமல் குஜராத் மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டது. கன்னையா குமார் சமீபத்தில் தான் காங்கிரஸில் இணைந்தார். அதேபோல சுயேட்சை எம்எல்ஏ-ஆக உள்ள ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரசில் இணையவுள்ளது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இந்தச் சூழலில் குஜராத் மாநிலத்தில் உள்ள முக்கிய காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார்.

முக்கிய மீட்டிங்
குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் படேல், மற்றும் ஜிக்னேஷ் மேவானி, அமித் சவ்தா, சக்திசிங் கோஹில், பரேஷ் தனனி, அர்ஜுன் மோத்வாடியா மற்றும் அமீ யாஜ்னிக் ஆகியோருடன் அடுத்தாண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தல் குறித்து ராகுல் காந்தி முக்கிய ஆலோசனையை மேற்கொண்டார். அடுத்தாண்டு காங்கிரஸ் கமிட்டி தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், அது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவுக்கு ஹர்திக் படேல் மற்றும் சக்திசிங் கோஹில் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை
இது குறித்த புகைப்படங்களைக் காங்கிரஸ் வெளியிட்டாலும், மீட்டிங் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. 2022 ஆம் ஆண்டின் இறுதியில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகுமாறு ராகுல் காந்தி வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவிகளுக்கு யாரை நியமிக்கலாம் என்பது குறித்து அனைவரிடமும் தனித்தனியாக ராகுல் காந்தி கருத்துக் கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் நிலை
குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மோசமான தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து குஜராத் காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த சவ்தா குஜராத் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தனனி ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால், குஜராத் காங்கிரஸ் பொறுப்பாளர் ராகு சர்மா ஆகியோரும் கலந்துகொண்டனர். குஜராத்தில் வலுவாக உள்ள பாஜக அரசைத் தோற்கடிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications