காஷ்மீர் விஷயத்தில் சீனா திடீர் மனமாற்றம்.. நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது
Recommended Video
டெல்லி: சீனா அதிபர் ஷி ஜின்பிங் விரைவில் தமிழகத்தின் மாமல்லபுரம் வர உள்ள நிலையில், இந்தியா பாகிஸ்தான் நாடுகள் இடையே உள்ள காஷ்மீர் பிரச்சனையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது சீனா.
சீனா அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளார்கள். இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக, ராஜாங்க ரீதியான உறவுகள் தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
எனினும் இந்த சந்திப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக சீனா இன்னமும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் சந்திப்பு ஓரிருநாள் தாமதம் ஆகுமா அல்லது அக்டோபர் 11ம் தேதி நடைபெறுமா என்பது குறித்து தெரியவில்லை. எனினும் சீனா அதிபர் ஷி ஜின்பிங் உறுதிதான் என்றாலும் இந்த தேதிதான் என்பது இறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
எந்த அறிவிப்பும் இல்லை
இந்நிலையில் சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது அதிபர் ஷி ஜின்பிங்கின் இந்திய வருகை குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இரு நாடுகளே பேசணும்
எனினும் சீனா இந்தியா பாகிஸ்தான் நாடுகள் இடையே உள்ள காஷ்மீர் பிரச்சனையில் தனது நிலைப்பாட்டை சமீப கால நிகழ்களுக்கு பிறகு மாற்றிக்கொண்டுள்ளது சீனா. காஷ்மீர் விஷயத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் ஒப்பந்தப்படி இந்தியா பாகிஸ்தான் ஆக இரு நாடுகளே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
இப்படி ஒரு மாற்றம்
சீனா அதிபர் ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சீனாவின் பெய்ஜிங் நகருக்கு வந்துள்ள நிலையில் சீனாவிடம் இருந்து காஷ்மீர் விஷயத்தில் இப்படி மாற்றம் வந்துள்ளது.
எப்போது வருகை
இதனிடையே அதிபரின் இந்திய வருகை குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெங், இந்தியாவும் சீனாவும் உயர் மட்ட பரிமாற்றங்களின் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. இரு தரப்பினரும் உயர் மட்ட வருகைக்கு தகவல் தொடர்பு பரிமாற்றத்தைக் கொண்டுள்ளனர். அவரது இந்திய வருகை குறித்து எந்தவொரு புதிய தகவலும் விரைவில் வெளியிடப்படும் என்றார்.
மாறிய நிலைப்பாடு
இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளே காஷ்மீர் விஷயத்தில் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அதுவே சீனாவின் நிலைப்பாடு என்றும் ஜெங் கூறினார். முன்னதாக ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்து லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக ஆக்கியதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.