அடுத்தடுத்து யூடர்ன் போட்ட 3 விமானங்கள்.. எல்லாமே பிரச்சினை தான்.. பயணிகள் திக்திக்! என்ன நடக்கிறது
டெல்லி: அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்த சோகமான சம்பவத்திற்குப் பிறகு, பல்வேறு விமானங்களில் தொடர்ச்சியாகத் தொழில்நுட்ப கோளாறுகள் பதிவாகி வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஏர் இந்தியாவில் 2 சம்பவம், பிரிட்டிஷ் ஏர்வேஸில் ஒரு சம்பவம் என மொத்தம் மூன்று முக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஏர் இந்தியா வினம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது. கடந்த ஜூன் 12ம் தேதி குஜராத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திடீரென விபத்திற்குள்ளானது. விமானம் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்தது. அது அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

ஏர் இந்தியா விபத்து
விமானத்தில் மொத்தம் 230 பயணிகள், 12 ஊழியர்கள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர். அதில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில், 231 பேர் உயிரிழந்தனர். மேலும், விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதால்.. அங்கிருந்த சிலரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் ஏர் இந்தியா நிறுவனத்திற்குக் கெட்ட பெயரைப் பெற்றுத் தந்துள்ளது
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து ஏர் இந்தியா போயிங் விமானங்களிலும் தீவிர சோதனை நடத்த சிவில் ஏவியேஷன் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே வெறும் 24 மணி நேரத்திற்குள் மூன்று வெவ்வேறு விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அந்த விமானங்கள் புறப்பட்ட சில நிமிடங்களில் யூடர்ன் போட்டு தரையிறங்கியுள்ளன. இது விமான போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
டெல்லி-ராஞ்சி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
ஜூன் 16, 2025 அன்று, டெல்லியில் இருந்து ராஞ்சிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புறப்பட்ட சில நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் டெல்லிக்கு திரும்பியது. விமானம் ஆய்வு செய்யப்பட்ட பிறகு, மீண்டும் இயல்பான இயக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஹாங்காங்-டெல்லி ஏர் இந்தியா விமானம் (AI315)
அதே நாளில், ஹாங்காங் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட 90 நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் ஹாங்காங் விமான நிலையத்திற்குத் திரும்பியது. ஏடிசியை தொடர்பு கொண்ட விமானிகள், "பயணத்தைத் தொடர விரும்பவில்லை" எனக் கூறினர். இதையடுத்து விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. தற்போது விமானம் விரிவான ஆய்வில் உள்ளது.. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
லண்டன் சென்னை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்
மேலும், லண்டனில் இருந்து சென்னைக்குப் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்திலும் கூட தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. முதலில் சிறிது நேரம் வானில் வட்டமடித்த விமானம் பாதுகாப்பு கருதி எரிபொருளை நடுவானில் வெளியேற்றியது. பிறகு அது குறைவான எரிபொருளோடு லண்டன் விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது.
அகமதாபாத் விமான விபத்தின் தாக்கம்
இந்த சம்பவங்கள், ஜூன் 12 அன்று நடந்த அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு நிகழ்ந்துள்ளன. அந்த விபத்தில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்குப் பிறகு, இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) அனைத்து போயிங் 787 விமானங்களிலும் பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இதனால் பல விமானங்கள் தாமதம் மற்றும் ரத்து ஆகியவற்றைச் சந்தித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications