நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. அதிமுக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.. சென்னையில்..!
சென்னையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது
சென்னை: சட்டப்பேரவை பொதுத்தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அதிமுக ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.. இந்த தேர்தல் அனைத்து கட்சிகளுக்குமே மிக முக்கியமான தேர்தலாகும்.. அதனால், தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் ஜரூராக தொடங்கியுள்ளன.
அந்த வகையில், சமீபத்தில் தேர்தல் பணிகளை துரிதப்படுத்த அதிமுக மாவட்டங்களை பிரித்து கூடுதலாக பொறுப்பாளர்களை அறிவித்தது. அதேபோல, அதிமுக அமைச்சர்கள், பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது.
கடந்த நவம்பர் 20-ம் தேதியும் இதுபோன்றே ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது... அந்த கூட்டத்தில், தேர்தல் பணிகள் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கு ஏராளமான ஆலோசனைகள், வழிமுறைகள் வழங்கப்பட்டன. வரப்போகும் தேர்தலில் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும், அதனால், பெண்களுக்கான வாக்குச்சாவடிகளில் பெண் முகவர்களை நியமித்தல், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பூத் கமிட்டிகள் அமைத்தல் போன்றவை குறித்தும் மாவட்ட செயலாளர்களுக்கு அப்போது அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் கொரோனா விதிமுறை மீறல் - அரசு பதில் தர ஹைகோர்ட் ஆணை
அதன் அடிப்படையில், அவர்கள் இதுவரை மேற்கொண்ட பணிகள் குறித்த விவரங்களுடன் இன்றைய கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.. தரப்பட்ட பணிகள் தொடர்பான அறிக்கையுடன் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு வலியுறுத்தப்பட்டு உள்ளது.. இதைதவிர, பிரச்சாரத்தை விரைவில் தொடங்குவது குறித்தும் இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.