டெல்லி அழைப்பு.. ஜி 20 மாநாடு ஆலோசனைக் கூட்டம்.. பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி..குஷியில் ஆதரவாளர்கள்
சென்னை: டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் ஜி20 மநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனால், அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
உலகின் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகளில் ஒன்றாக ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பு உள்ளது.
இந்த அமைப்பின் தலைமை பொறுப்பு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த முறை ஜி 20 மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்த இருக்கிறது.
பிரதமர் மோடி தலைமையில் ஜி20 மாநாடு ஆலோசனைக் கூட்டம்! டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!
இந்தியா தலைமையில் ஜி 20 மாநாடு
இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, அர்ஜென்டினா, இத்தாலி, துருக்கி, இந்தோனேசியா, மெக்சிகோ, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் ஜி 20 கூட்டமைப்பில் இடம் பிடித்துள்ளன. இந்தியா தலைமை தாங்கி நடத்தும் இந்த ஜி 20 மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக தயார் நிலைகள் குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
ஜனாதிபதி மாளிகையில் ஆலோசனை கூட்டம்
இதற்காகஅனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்தித்து பேச முடிவு செய்துள்ளது. அந்த வகையில் இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இதற்காக இன்று காலை மு.க ஸ்டாலின் டெல்லிக்கு செல்கிறார்.
எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் மு.க ஸ்டாலின், பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேச வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில், கூட்டத்திற்கு வரும் அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் பிரதமர் வரவேற்கிறாரே தவிர, தனித்தனியாக யாரையும் சந்தித்து பேச திட்டமிடவில்லை டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. இதனிடையே, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி செல்கிறார் எடப்பாடி
இந்த அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிசாமி இன்று காலை டெல்லி புறப்பட்டு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்த உள்ளார். அதில், முன்னாள் அமைச்சர்கள் உள்பட எடப்பாடி பழனிசாமி தரப்பு நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
எடப்பாடி ஆதரவாளர்கள் உற்சாகம்
ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி காலை 11 மணியளவில் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் எழுதிய இந்த கடிதத்தை பார்த்ததும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.