ஆயிரம் சிக்கல் இருந்தாலும் அசராத அதிமுக.. ஜெயலலிதா பாணியில் அதிரடி காட்டும் தலைமை.. இதோ லேட்டஸ்ட்
Recommended Video
டெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அதிமுக எடுக்கக் கூடிய முக்கியமான முடிவுகள், அவரது ஸ்டைலை விட்டு மாறவில்லை என்பது மட்டும் உண்மை.
இதன் சமீபத்திய உதாரணம்தான் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு.
விக்ரவாண்டி தொகுதிக்கு முத்தமிழ்ச் செல்வன் என்பவரும், நாங்குநேரி தொகுதி ரெட்டியார்பட்டி நாராயணன் என்பவரையும், வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளனர்.

பதவிகள்
இதில் என்ன ஜெயலலிதாவின் பாணி என்கிறீர்களா? இந்த இரு வேட்பாளர்களின் பெயரையும் உங்களில் பெரும்பான்மையோர் இதற்கு முன்பாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை என்பது பதிலாக இருந்தால், கண்டிப்பாக இதுதான் ஜெயலலிதா பாணி. "யாருக்கு, எப்போது பதவி வரும் என்பது தெரியாது. ஆனால் உழைப்பவர்களுக்கு சரியான நேரத்தில் பதவி வரும்" என்ற ஒரு சொல் வழக்கு அதிமுகவில் உண்டு. இந்த வழக்கத்தை ஏற்படுத்தியது ஜெயலலிதா.

அறியாத வேட்பாளர்கள்
234 தொகுதிகளிலும் கூட, அதிகம் பேர் அறியப்படாத வேட்பாளர்களை நிறுத்தி, அறுதிப் பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியமைக்க கூடிய வல்லமை ஜெயலலிதாவுக்குத்தான் இருந்தது. ஜெயலலிதாவின் முகவசீகரம், மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகிய இரண்டும்தான் வாக்குகளை அறுவடை செய்துள்ளதே தவிர என்றுமே வேட்பாளரின் முகங்கள் கிடையாது, என்பதுதான் கடந்த கால வரலாறு.

பழைய பாணியில்
அம்மா வழியில் ஆட்சி நடத்துகிறோம்.. என்று சொல்லக்கூடிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே, இப்போதும் இதே நடைமுறையை பின்பற்றி வருகிறார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம், சில மாதங்கள் முன்பாக நடந்து முடிந்த ராஜசபா தொகுதிக்கான தேர்தல்.

ராஜ்யசபா தேர்தல்
தமிழகத்தில் காலியாக இருந்த 6 ராஜ்யசபா இடங்களுக்கு கடந்த ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக தரப்பில் 3 பேரும், அதிமுக தரப்பில் 3 பேரும் வெற்றிபெற எம்எல்ஏக்கள் பாலம் கை கொடுத்தது. திமுக சார்பில் பிரபல வழக்கறிஞர் வில்சன், சண்முகம், கூட்டணியிலுள்ள மதிமுகவின் வைகோ ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிமுக சார்பில் வைத்திலிங்கம் உள்ளிட்ட பல மூத்த தலைவர்களுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கலாம் என்ற பேச்சு பரவலாக இருந்தது. ஆனால் சந்திரசேகரன், முகமது ஜான் ஆகிய புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளித்தது அதிமுக தலைமை. கூட்டணி கட்சியான பாமகவின் அன்புமணி ராமதாசுக்கு ஒரு சீட் ஒதுக்கியது அதிமுக.

ஸ்டார் வேட்பாளர்கள்
இந்த அதிரடியை, அப்போது யாருமே எதிர்பார்க்கவில்லை. இதோ இப்போது, நாங்குநேரியில் கூட, நெல்லைச் சீமையில், நன்கு அறியப்பட்ட, மண்ணின் மைந்தர் மனோஜ் பாண்டியன், கூட்டணி கட்சியான சமத்துவ மக்கள் கட்சியின் சரத்குமார் என பெரிய புள்ளிகள் பெயர்கள் அடிபட்டபோது, நாராயணன் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. முத்தமிழ்செல்வன் தேர்வும் அதுபோலத்தான். இதன் மூலம் ஜெயலலிதா பாணியிலிருந்து இம்மியளவும் மாறவில்லை என்பதை எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தலைமை தெரிவிக்கிறது.

தைரியமான முடிவு
பெரும்பான்மைக்கு மிக குறைந்த அளவே அதிகமான எம்எல்ஏக்களை கொண்டு ஆட்சி நடத்தி வரும் நிலையில், இப்படியான அதிரடி முடிவுகளை எடுப்பதற்கு கண்டிப்பாக ஒரு தைரியம் தேவைதான். அந்த வகையில், அதிமுக அதன் தனித்துவத்தை இக்கட்டான நிலைமையையும் காப்பாற்றிக் கொண்டு உள்ளது என்பது அக் கட்சி தொண்டர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய செய்தி.












Click it and Unblock the Notifications