செப்டம்பர் மாதத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு.. எய்ம்ஸ் இயக்குநர்
டெல்லி: இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
கொரோனா முதல் அலை வந்து இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் ஏராளமான உயிரிழப்புகளை இந்தியா சந்தித்தது. தற்போது டெல்டா + வைரஸும் பரவி வருகிறது.
இந்த நிலையில் கொரோனாவின் 3ஆவது அலை அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் தொடங்கும் என மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளார்கள். முதலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அதன் பிறகு 18 முதல் 45 வயதுக்குள்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுகின்றன.

3ஆவது அலை
இந்த நிலையில் முதல் அலையில் பெரியவர்கள், இரண்டாவது அலையில் நடுத்தர வயதினர் அதிகம் தாக்கப்பட்டதால் 3ஆவது அலையில் குழந்தைகளை தாக்கக் கூடும் என்ற உறுதிப்படுத்தப்படாத கணிப்புகள் உள்ளன. இதனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிக்கான மருத்துவ சோதனைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

தடுப்பூசி
இந்திய மக்கள் தொகையில் இதுவரை 6 சதவீத மக்களே தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த ஆண்டுக்குள் அனைத்து பெரியவர்களுக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில் சைடூஸ் தடுப்பூசி சோதனையை முடித்துக் கொண்டு அவசர ஒப்புதலுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் அல்லது செப்டம்பருக்குள் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் குழந்தைகளுக்கான மருத்துவ சோதனைகளை முடித்துவிடும்.

பைசர் தடுப்பூசி
பைசர் தடுப்பூசி ஏற்கெனவே அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊசி 12 முதல் 15 வயது சிறுவர்களுக்கு செலுத்தலாம். எனவே வரும் செப்டம்பர் மாதத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும்.

பாதுகாப்பானது
பைசர் தடுப்பூசியை குழந்தைகளுக்கு பயன்படுத்துவது பாதுகாப்பானதுதான். ஆனால் அமெரிக்காவின் தயாரிப்பான அந்த ஊசி நமக்கு எத்தனை கிடைக்கும் என தெரியவில்லை. அதனால் நம் நாட்டு தடுப்பூசிகள் மூலமும் குழந்தைகளுக்கு செலுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். செப்டம்பர் மாதம் ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசி நமக்கு கிடைக்கும் என்றார் குலேரியா.












Click it and Unblock the Notifications