முடங்கும் ‘ஏர் இந்தியா'.. வெளிநாடுகளுக்கான விமானங்கள் அதிரடி குறைப்பு.. மக்களே கவனமாக இருங்க
டெல்லி: விமான எரிபொருள் விலை உயர்வால் 'ஏர் இந்தியா' விமான நிறுவனம் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 'ஏர் இந்தியா' தனது சர்வதேச விமான சேவைகளை குறைக்க முடிவெடுத்துள்ளது. இதனை 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அறிவித்துள்ளார்.
நம் நாட்டை சேர்ந்த விமான நிறுவனம் தான் 'ஏர் இந்தியா'. இந்த விமான நிறுவனம் டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது 'ஏர் இந்தியா' நிறுவனம் கடும் நெருக்கடியை எதிர்கொள்ள தொடங்கி உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் விமானங்களின் எரிபொருள் விலை கிடுகிடுவென உயர்ந்ததுதான். ஒரு பேரல் விமான எரிபொருள் விலை சமீபத்தில் பேரல் ஒன்றுக்கு 172 டாலர் வரை உயர்ந்தது. இதனால் விமான நிறுவனங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.
தலையிடாத மத்திய அரசு
இந்நிலையில் தான் விமான எரிபொருட்களின் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டது. ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIA) சார்பில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தது. ஆனால் மத்திய அரசு சார்பில் இன்னும் பதிலளிக்கவில்லை.
சேவையை முடக்கும் ஏர் இந்தியா
இந்நிலையில் தான் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கான விமான சேவைகளை குறைக்க 'ஏர் இந்தியா' நிறுவனம் முடிவெடுத்துள்ளது. எரிபொருட்களின் செலவை குறைக்கும் நோக்கத்தில் விமானங்களின் இயக்கத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி விமான எரிபொருட்களின் விலை உயர்வை தொடர்ந்து முதற்கட்டமாக உள்நாடு, வெளிநாடு செல்லும் 100 விமானங்களின் சேவைகளை முடக்க 'ஏர் இந்தியா' திட்டமிட்டுள்ளது.
2 முக்கிய காரணங்கள்
'ஏர் இந்தியா'வின் இந்த முடிவுக்கு விமானங்களுக்கு தேவையான எரிபொருட்களின் விலை உயர்வு மட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் உள்ளிட்டவையும் முக்கிய காரணமாகும். ஏனென்றால் போர் பதற்றத்தால்திடீரென மூடப்படும் வான்வெளி பரப்புகளால் விமானங்கள் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விமானம் கூடுதல் நேரம் பயணிக்க வேண்டி உள்ளது. இதனால் விமானங்களுக்கான எரிபொருட்களின் தேவை அதிகரிக்கிறது.
ஜூலை வரை சேவைகள் குறைப்பு
இதனால் 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. அதன்படி ஒரு பயணத்தில் கிடைக்கும் வருமானத்தில் இதற்கு முன்பு 30-40% மட்டுமே எரிபொருள் செலவாக இருந்தது. ஆனால் தற்போது 55-60 சதவீதம் வரை எரிபொருள் செலவு செய்ய நேரிடுகிறது. இது லாபத்தை கணிசமாக குறைத்துள்ளது. 'ஏர் இந்தியா' மட்டுமின்றி பல நிறுவனங்களும் இந்த பாதிப்பை எதிர்கொள்கின்றன.
இதனால் தான் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் விமானங்களின் எண்ணிக்கையை குறைக்க 'ஏர் இந்தியா' நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை வரும் ஜூலை மாதம் வரை நீட்டிப்பு செய்யப்படுவதாகவும், எரிபொருள் செலவு குறையும்போது மீண்டும் வழக்கமான முறையில் விமான சேவைகள் தொடங்கும் எனவும் 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி காம்பெல் வில்சன் தெரிவித்துள்ளார். இதனால் விமானங்களில் வெளிநாடு செல்ல திட்டமிடுவோர் சரியான திட்டமிடலுடன் செயல்படுவது நல்லது.












Click it and Unblock the Notifications