தொடரும் வலதுசாரி மிரட்டல்.. கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணா கச்சேரியை ரத்து செய்த ஏர்போர்ட் ஆணையம்
Recommended Video
டெல்லி: வலதுசாரிகளின் கடும் இணையதள விமர்சனங்கள் காரணமாக, கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, டெல்லியில், நடத்தவிருந்த இசைக் கச்சேரி ரத்து செய்யப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகசாசே விருது பெற்ற முன்னணி கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா. நவம்பர் 17ம் தேதி, டெல்லி சாணக்யபுரி பகுதியிலுள்ள நேரு பார்க்கில், இவரது இசைக் கச்சேரி நடப்பதாக இருந்தது.
'பூங்காவில் நடனம் மற்றும் இசை' என்ற பெயரிலான இரு நாட்கள் கலாச்சார நிகழ்வின் ஒரு அங்கமாக கிருஷ்ணாவின் இசைக்கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அறிவிப்பு
ஸ்பிக்-மேக்கே மற்றும் இந்திய ஏர்போர்ட் ஆணையம் (AAI) ஆகியவை இணைந்து, இந்த கலாச்சார நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தன. ஏர்போர்ட் ஆணையம் கடந்த 5ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதன்பிறகு அதில் பங்கேற்பவர்கள் குறித்த விவரங்களை, அடுத்தடுத்த நாட்களில் வெளியிட்டது ஏர்போர்ட் ஆணையம்.
டி.எம்.கிருஷ்ணா பங்கேற்பு
நவம்பர் 10ம் தேதி, ஏர்போர்ட் ஆணையம் வெளியிட்ட ட்வீட்டில், டி.எம்.கிருஷ்ணா, இந்த கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்று இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. டெல்லியில் வெளியாகும் பல செய்தித்தாள்களிலும், இதுகுறித்த விளம்பரம் இடம் பெற்றிருந்தது. ஆனால், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, திடீரென, ஏர்போர்ட் ஆணயம் சார்பில், ஸ்பிக்-மேக்கேவிற்கு அனுப்பப்பட்ட இ-மெயிலில், தவிர்க்க முடியாத காரணத்தால், டி.எம்.கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 17 மற்றும் 18ம் தேதிகளில் திட்டமிட்ட இசை மற்றும் நடன நிகழ்ச்சியை நடத்த முடியாத சூழ்நிலை உள்ளதாக அந்த இ-மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் ரத்து
நிகழ்ச்சியை வேறு ஒரு நாளைக்கு ஒத்தி வைத்துவிடவும், இதுதொடர்பாக எல்லோருக்கும் தகவல் தெரிவித்துவிடவும் என்றும் இமெயிலில் கூறப்பட்டுள்ளது. ஸ்பிக்-மேக்கேவுடன், இணைந்து புதிய தேதியை அறிவிக்க ஏர்போர்ட் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆனால் ஏர்போர்ட் ஆணையம் வெளியிட்ட டி.எம்.கிருஷ்ணா இசைக் கச்சேரி தொடர்பான ட்விட்டர் அறிவிப்பிற்கு வந்த எதிர்வினைகள்தான், நிகழ்ச்சியை ரத்து செய்ய காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்ப்புக்கு காரணம்
வலதுசாரியினர், டி.எம்.கிருஷ்ணாவிற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கர்நாடக சங்கீதத்தில், யேசு மற்றும் அல்லா ஆகிய இந்து மத கடவுள்கள் தவிர்த்த பிற மத கடவுள்களையும் பாடி கச்சேரி நடத்துவதாக அறிவித்தவர் கிருஷ்ணா. பாடியும் உள்ளார். எனவே கர்நாடக இசைக் கலைஞர்கள் சிலரும், வலதுசாரியினரும், கிருஷ்ணாவிற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். அமெரிக்காவில் கடந்த ஆகஸ்ட் மாதம், கோயில் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட டி.எம்.கிருஷ்ணா இசைக் கச்சேரியும், எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இப்போது டெல்லியிலும், இதே காரணத்திற்காகத்தான் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வசைச் சொற்கள்
ஆனால் ஏர்போர்ட் ஆணைய தலைவர் குருபிரசாத் மொகபத்ரா இந்த காரணத்தை மறுத்துள்ளார். தவிர்க்க முடியாத காரணத்தால்தான் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், கிருஷ்ணா கடந்த திங்கள்கிழமை ஏர்போர்ட் ஆணையத்தின் நிகழ்ச்சி குறித்தான ட்வீட்டை ரீட்வீட் செய்த பிறகு, அதற்கு கொடுக்கப்பட்ட எதிர்வினைகள் கடுமையாக இருந்தன. அரசு பணத்தில், 'தேச விரோதி' டி.எம்.கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சிக்கு ஏர்போர்ட் ஆணையம் ஏற்பாடு செய்தது கண்டனத்திற்கு உரியது என்றெல்லாம் ட்வீட்டுகளை பார்க்க முடிந்தது. மதமாற்றி, நகர்ப்புற நக்சல் என்றெல்லாம் கிருஷ்ணாவை வலதுசாரிகள் வர்ணித்தனர்.
பயப்படமாட்டேன்
இதுகுறித்து டி.எம்.கிருஷ்ணா கூறுகையில், நவம்பர் 17ம்தேதி, டெல்லியில் எங்கே வேண்டுமானாலும் எனக்கு ஒரு மேடையை கொடுங்கள். நான் வருகிறேன், பாடுகிறேன். இதுபோன்ற மிரட்டல்களுக்கு அஞ்சி நாம் வாழ கூடாது என்று தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் திருப்பூர் நகரில் டி.எம்.கிருஷ்ணா பங்கேற்ற இசை நிகழ்ச்சிக்கு வலதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பலத்த பாதுகாப்புக்கு நடுவே அவர் தனது நிகழ்ச்சியை நடத்தியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.