பாகிஸ்தான் உளவு அமைப்பு பணம் கொடுக்கிறது.. அகிலேஷ் யாதவ் மீது பாஜக அமைச்சர் சரமாரி குற்றச்சாட்டு
டெல்லி: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவியுடன் செயல்பட்டு வருவதாகவும், முஸ்லிம்களை திருப்திப்படுத்த அவர் மதம் மாறக் கூட செய்வார் என்றும் உத்தரப் பிரதேச அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா விமர்சனம் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு மத அரசியல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை விட்டு விட்டு, மத ரீதியாக பாஜக தரப்பிலிருந்து அவ்வப்போது எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை முன் வைக்க ஆரம்பித்துள்ளன.
"முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இஸ்லாமிய உலகிற்கு சவாலாக மாறியுள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்களிடமிருந்து அனைத்து ஆதரவையும் பெறுகிறார். அகிலேஷ் ஐஎஸ்ஐயிடம் இருந்து 'சன்ரக்ஷன் அவுர் சுஜாவ்' (ஆதரவு மற்றும் ஆலோசனை) பெறுகிறார். அவர்களிடமிருந்து பணம் கூட பெறக் கூடும்" என்று பாஜக தலைவர் சுக்லா கூறினார்.

சுதந்திர போராட்டம்
ஞாயிற்றுக்கிழமை ஹர்தோயில் அகிலேஷ் யாதவ் ஆற்றிய உரையில் மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னா ஆகியோர் இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடியதாக அகிலேஷ் யாதவ் பேசிய நிலையில், சுக்லா இவ்வாறு காட்டமாக கருத்து கூறியுள்ளார்.

முஸ்லீமாக மாறுவார்
"முஸ்லிம்களை திருப்திப்படுத்த, யாதவ் 'நமாஸ்' செய்து 'ரோஜா' (உண்ணா நோன்பு) கடைபிடித்தார். அவர் முஸ்லீமாக மதம்மாறி முஸ்லீம்களின் வாக்குகளை பெறக் கூட முயல்வார். அகிலேஷ் யாதவ் தனது உரையில், இந்தியாவின் 'இரும்பு மனிதர்' வல்லபாய் படேலை புகழ்ந்தார். ஆனால், அவரோடு சேர்த்து முகமது அலி ஜின்னா உட்பட நான்கு தலைவர்களை சமமாகப் பேசிவிட்டார். சர்தார் வல்லபாய் பட்டேலை ஜின்னாவுடன் அகிலேஷ் யாதவ் ஒப்பிட்டுப் பேசியது கண்டிக்கத்தக்கது. அதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

முகமது அலி ஜின்னா
ஹர்தோயில் நடந்த பொதுக்கூட்டத்தில், அகிலேஷ் யாதவ் தனது உரையின்போது, "சர்தார் படேல், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் முகமது அலி ஜின்னா ஆகியோர் ஒரே கல்வி நிறுவனத்தில் படித்து பாரிஸ்டர்கள் ஆனார்கள். அவர்கள்தான், இந்தியா சுதந்திரம் பெற உதவினார்கள், ஒருபோதும் தங்கள் போராட்டத்திலிருந்து பின்வாங்கவில்லை என்று தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் தடை
1948ல் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் படேல், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (RSS) மீது விதித்த தடையையும் அகிலேஷ் யாதவ் தனது பேச்சின்போது குறிப்பிட்டார். இந்த பேச்சுகளுக்கெல்லாம் பதிலாகத்தான் அகிலேஷ் யாதவுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்போடு தொடர்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா.












Click it and Unblock the Notifications