அப்படியே அச்சு அசல்.. வார்த்தைக்கு வார்த்தை மாறாமல் ட்வீட் போட்ட சாய்னா நேவால்.. அக்ஷய் குமார்!
டெல்லி: விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக ஒரே மாதிரியான பதிவை பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஆகியோர் வார்த்தைக்கு வார்த்தை ஒரே மாதிரியாக காபி பேஸ்ட் செய்து ட்விட் போட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து சொல்ல துவங்கி இருப்பதற்கு, இந்திய பிரபலங்கள் அனைவரும் சொல்லி வைத்தார் போல் அடுத்தடுத்து நேற்று மொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இந்தியாவின் பிரச்சனையை இந்தியாவே பார்த்துக்கொள்ளலாம். உங்கள் வேலையை பாருங்கள் என்ற ரீதியில் நமது பாலிவுட் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சச்சின் ட்வீட்
பாலிவுட்டில் ஏக்தா கபூர், கரண் ஜோஹர், அஜய் தேவ்கன் முதல் அக்ஷய் குமார் வரையிலும், கிரிக்கெட் மற்றும் விளையாட்டு துறையில் சுரேஷ் ரெய்னா முதல் சச்சின் டெண்டுல்கர் வரையிலும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வெளிநாட்டு பிரபலங்களுக்கு எதிராக ஒரே மாதிரியான பதிவுகளை வெளியிட்டு ட்விட்டரில் கலக்கினர்.
கடுமையான ட்வீட்
அதேநேரம் கங்கனா ரனாவத் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் ஆகியோர் ட்விட்டரில் விவசாயிகள் போராட்டத்தை எதிர்த்தும், வெளிநாட்டு பிரபலங்களின் கருத்துக்களை எதிர்த்தும் மற்றவர்களை விட மிக கடுமையான கருத்துக்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
காபி பேஸ்ட்
இது ஒருபுறம் எனில், இதில் சுவாரஸ்யமான விஷயமு நடந்திருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோரின் ட்வீட்டுகள் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே காபி பேஸ்ட் செய்து ஒரே மாதிரி இருந்தது. இதில் யார் யாருடைய ட்வீட்டை காபி பேஸ்ட் செய்தார்கள் என்று தெரியவில்லை.
அக்ஷய் ட்வீட்
சாய்னாவின் ட்வீட் காலை 11:00 மணியளவில் வெளியிடப்பட்டிருந்தது அதில் "விவசாயிகள் நம் நாட்டின் மிக முக்கியமான பகுதியாக உள்ளனர். அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தெளிவாக உள்ளன. மக்களிடையே வேறுபாடுகளை உருவாக்குபவர்களுடன் கவனம் செலுத்துவதை விட, ஒரு இணக்கமான தீர்மானத்தை ஆதரிப்போம். இணைந்த கைகள் # IndiaTogether #IndiaAgainstPropaganda " என கூறியிருந்தார். இதே கருத்தையே அக்ஷய் குமார் புதன்கிழமை காலை 6 மணியளவில் வெளியிட்டிருந்தார். இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டிருந்த செய்தின் புகைப்படத்தை டேக் செய்து இருவரும் கருத்தை கூறியுள்ளார்கள்.